வடக்கு கிழக்கில் 70 வீதமான மக்களின் வாக்குகளை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு, எந்த பலனுமின்றி நல்லாட்சி அரசின் வரவு செலவு திட்டங்களை ஆதரித்தார்கள். ரணில் விக்கிரமசிங்கவினதும், மைத்திரிபால சிறிசேனவினதும் கால்களை நக்கவா அதனை செய்தீர்கள் என காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன்.
அத்துடன், ஐபிசி ஊடகத்தில் வெளியான போலிச் செய்தியை நம்பி, மட்டக்களப்பிலுள்ள தமிழ் அரசு கட்சி ஆதரவாளர்களான பேஸ்புக் காட்போட் வீரர்கள் பகிர்ந்தார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்க வேண்டிய விடயங்களை ஆராய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை குழுவினர் மட்டக்களப்பிற்கு வந்தனர். கொழும்பிலுள்ள தலைமை காரியாலத்தில் தீர்மானிக்கப்பட்டு, அமைச்சர்கள் 25 மாவட்டங்களிற்கும் அனுப்பப்படுகிறார்கள். அப்படித்தான் மட்டக்களப்பிற்கு வந்தனர்.
வியாழேந்திரன், சந்திரகுமாரின் அழைப்பின் பேரிலேயே லொஹான் ரத்வத்தை வந்தார், இருவருடனும் தனிப்பட்ட சந்திப்பை நடத்தினார், லொஹானிற்கு வியாழேந்திரன் செங்கம்பள வரவேற்பளித்தார் என போலி செய்தி வெளியிடப்பட்டு வருகிறது.
இது மூன்றும் பொய் தகவல்கள். கூட்டம் ஆரம்பித்த பின்னர்- எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைப்பாளர்களும் கலந்து கொண்ட பின்னர்தான் நான் கூட்டத்திற்கு வந்தேன். நான் எப்படி செங்கம்பள வரவேற்பளிக்க வேண்டும்.
இந்த 3 விடயங்களிலும் பொய் தகவல் பரப்பியவர்கள், அதை நிரூபித்தால், நாளை காலை 10 மணிக்குள்- 24 மணித்தியாலத்திற்குள்- நான் பதவி விலகி, அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன். இதை பகிரங்க சவாலாக விடுகிறேன்.
அதை செய்ய தவறினால், என் மீது போலிக்குற்றச்சாட்டு செலுத்தியவர்களும், அவர்களின் கூஜா தூக்கிகளும் தனது வேலையிலிருந்து ஒதுக்க முடியுமா?
அன்றைய கூட்டம் முடிந்த பின்னர் மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து உண்மையை கூறினேன். எனினும், ஐபிசியில் போலி செய்தி வெளியாகியிருந்தது. போலிச் செய்திகளை மக்களிடம் கொண்டு செல்வது தவறானது. ஏற்கனவேயும் இப்படி போலி செய்தி வெளியிட்டனர்.
இந்த போலி செய்தியை மட்டக்களப்பு தமிழரசு கட்சி காட்போட் வீரர்கள் பகிர்ந்தனர்.
ஐபிசியின் போலி செய்திக்கு மறுப்பு தெரிவிக்காவிட்டால், நீதிமன்றத்தை நாடுவேன்.
மட்டக்களப்பில் எமக்கு வாக்களித்தவர்களிற்கு எம்மால் முடிந்ததை செய்து வருகிறோம். மட்டக்களப்பில் இப்போதைய லேட்டஸ்ட் அரசியல்- அரச தரப்பு எம்.பிக்களை விமர்சிப்பது. காலையில் எழுந்து அதைத்தான் செய்கிறார்கள். இவர்களிற்கு வாக்களித்தவர்களிற்கு ஒரு விடயத்தை சொல்கிறோம். இவர்களால் மக்களிற்கு உரிமையையும் பெற்றுக்கொடுக்க முடியாது. அபிவிருத்தியையும் பெற்றுக்கொடுக்க முடியாது. மக்களிடம் எதை கூறி வாக்கு பெற்றீர்களோ அதை செய்யுங்கள்.
அடுத்தவனின் சட்டியில் என்ன அவிகிறது என பார்க்காமல், உங்களின் சட்டியில் என்ன கருகுகிறது என பாருங்கள்.
அரசியல் கைதிகள் விடயத்தில் தொடர்ந்து செயற்பட்டு வருகிறோம். அரசியல் கைதிகளை தொடர்ந்து பார்வையிட்டு வருகிறோம். எனது முயற்சிகளினாலேயே ஒரே தடவையில் 16 தமிழ் அரசியல் கைதிகளிற்கு விடுதலை கிடைத்தது.
நல்லாட்சி அரசில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கும், வரவு செலவு திட்டத்திற்கும் வாக்களித்து ஒரு அரசியல் கைதியை கூட பொதுமன்னிப்பில் விடுவிக்க முடியவில்லை.
லொஹான் ரத்வத்தையின் சப்பாத்தை நக்கவா அழைத்தீர்கள் என கேட்கிறார்கள். வடக்கு கிழக்கில் 70 வீதமான மக்களின் வாக்குகளை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு, எந்த பலனுமின்றி நல்லாட்சி அரசின் வரவு செலவு திட்டங்களை ஆதரித்தார்கள். தீர்வும் கிடைக்கவில்லை, அபிவிருத்தியும் கிடைக்கவில்லை. அப்படியிருந்தும் தரம் 1,2,3 மாணவரகளை போல கையை உயர்த்தி, ரணில் விக்கிரமசிங்கவினதும், மைத்திரிபால சிறிசேனவினதும் கால்களை நக்கவா அதனை செய்தீர்கள் என கேள்வியெழுப்பினார்.
தமிழ் மக்களின் கண்ணீரை வைத்தும், கல்லறையின் மீதும் நின்றபடி அரசியல் செய்யும் உங்களிற்கு உவ்வளவு இருக்குமெனில், எங்களிற்கு எவ்வளவு இருக்கும்.