நாய் உரிமையாளர் ஒருவர் தனது செல்லப்பிராணிக்காக, விமானத்தின் முழு வணிக வகுப்பு அறையை பதிவு செய்து அழைத்து சென்றுள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த நாய் உரிமையாளர் ஒருவரே, ஏர் இந்தியா விமானத்தின் முழு வணிக வகுப்பு அறையை பதிவு செய்து, நாயை அழைத்து சென்றுள்ளார்.
டாக்ஜோ என்ற நாயை வளர்த்து வரும் உரிமையாளர், மும்பையில் இருந்து சென்னைக்கு அதனை அழைத்துச் செல்ல, ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானத்தில், ஒரு முழு வணிக வகுப்பை முன்பதிவு செய்து அதனுடன் பறந்துள்ளார். இந்த வணிக வகுப்பை முன்பதிவு செய்ய 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்துள்ளார்.
மும்பையில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா விமானத்தில் வணிக வகுப்பு ஒரு இருக்கை 20 ஆயிரம் ரூபாய். எனவே அவர் மொத்த இருக்கைகளையும் முன்பதிவு செய்ததால் 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்திருப்பார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்பதிவு செய்ததை அடுத்து அவரது செல்லப் பிராணியான நாய்க்குட்டி கடந்த புதன்கிழமை அதிகாலை ஏர் இந்தியா விமானமான ஏஐ -671ல் ஏறி மும்பையில் இருந்து சென்னைக்கு இரண்டு மணி நேரம் குதூகலமாக பறந்து வந்துள்ளது. ஏர் இந்தியா ஏ 320 விமானத்தில் உள்ள ஜே – கிளாஸ் கேபினில் 12 இருக்கைகள் உள்ளன. இதனால் செல்லப்பிராணி வசதியாக பறந்ததாக உரிமையாளர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு செல்லப் பிராணிகளை பயணிகள் அறையில் அனுமதிக்கும் ஒரே இந்திய விமான நிறுவனம் ஏர் இந்தியா. ஒரு பயணி இரண்டு செல்லப்பிராணிகளுடன் பயணிக்கலாம் என்பதால் நாய்கள், பூனைகள் மற்றும் பறவைகள் போன்ற சிறிய செல்லப்பிராணிகள் அவற்றின் உடல்நிலையை சரி பார்த்து மற்றும் ரேபிஸ் தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பிப்பதை பொறுத்து விமானத்தில் அனுமதிக்கப்படுகிறது. ஏர் இந்தியா வணிக வகுப்பில் இதற்கு முன்னர் நாய்கள் பயணம் செய்துள்ள போதும் ஒரு முழு வணிக அறை செல்லப் பிராணிக்காக முன்பதிவு செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.