இணையசூது விளையாட்டுகளுக்கு அடிமையான மாணவன் ஒருவர் தனது வீட்டில் இருந்து இலட்சக்கணக்கான ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை இரகசியமாக விற்று பணம் பெற்ற சம்பவம் அம்பலமாகியுள்ளது.
18 வயது மாணவரை மாரவில பொலிசார் இன்று கைது செய்தனர்.
சந்தேக நபர் மாரவில கட்டுனேரிய பகுதியில் வசிக்கும் க.பொ.த உயர்தர மாணவர் ஆவார்.
மாணவனின் தாயும் தந்தையும் இத்தாலியில் வேலைக்கு சென்று விட்டனர். தாத்தா பாட்டிகளின் பராமரிப்பில் மாணவன் வாழ்ந்து வருகிறார்.
மாணவன் இணைய வழி சூதாட்டத்திற்கு அடிமையாகியிருந்தது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவன், கணினி வழியாக கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பின்னர்இணைய வழி விளையாட்டுக்களிற்கு அடிமையாகி விட்டார்.
மாணவனின் வீட்டில் இருந்த பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் திடீரென காணாமல் போயுள்ளது.
மோட்டார் சைக்கிள் வீட்டின் வாகன தரிப்பிடத்தில் இருந்த போது காணாமல் போனதால் மாணவனின் பாட்டி மற்றும் தாத்தா மாரவில பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாகிய மாணவனே அதனை விற்பனை செய்ததை கண்டறிந்தனர். கிட்டத்தட்ட 400,000 ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள்களை சுமார் 150,000 ரூபாவிற்கு விற்றதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது.
பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில், தனது தாய் மற்றும் பாட்டியிடம் இருந்து ரூ. 500,000 மதிப்புள்ள தங்க நகைகளை திருடி விற்பனை செய்ததையும் மாணவன் ஏற்றுக்கொண்டார்.
இந்த பணங்களை இணைய வழி சூதாட்டத்திற்கு பயன்படுத்தியுள்ளார்.