உடனடியாகச் செயற்படும் விதத்தில் இலங்கை ரூபாவை மதிப்புக் குறைக்குமாறு உரிமம்பெற்ற வங்கிகள் உத்தியோகபூர்வமாக கோரப்பட்டுள்ளன என்ற செய்திகள் பரப்பப்பட்டு வருவதனை இலங்கை மத்திய வங்கி மறுத்துள்ளது.
அத்தகைய செய்திகள் எவ்விதத்திலேனும் அடிப்படையற்றவை என பொதுமக்களுக்கு அறிவித்துள்ளதுடன் செலாவணி வீதத்தினை நிர்ணயிப்பதன் மீதான இலங்கை மத்திய வங்கியின் நிலைக்கு அல்லது தொழிற்பாட்டு ரீதியான ஏற்பாடுகளுக்கு இலங்கை மத்திய வங்கி எந்தவித மாற்றத்தினையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் வழமையான ஊடகங்கள் ஊடாகவும் பரப்பப்பட்டு வருகின்ற தவறானதும் தவறாக வழிநடத்துகின்றதுமான தகவல்களை நம்பவேண்டாம் எனவும் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி விடுக்கும் ஏதேனும் உத்தியோகபூர்வ அறிக்கை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், துணை ஆளுநர் அல்லது பெயர் மற்றும் பதவி மூலம் அடையாளப்படுத்தப்படுகின்ற இலங்கை மத்திய வங்கியின் எவரேனும் வேறு அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் மூலமே வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.