எங்களை இப்படி சொல்லி காயப்படுத்தாதீங்க .. குழந்தைகளின் குமுறல்
குழந்தைகள் மீது கோபம் வரும் போதும், மற்றவர்கள் விரும்பியதுபோல் அவர்கள் செயல்படும் போது அவர்களை காயப்படுத்தும் வார்த்தைகளை பிரயோகப்படுத்திவிடுகிறோம். வாயாடி .. சண்டைக்காரன் .. திருடன் .. பொய் பேசுகிறவன் .. பிடிவாதக்காரன் .. சுயநலவாதி .. போன்ற வார்த்தைகள் அவர்களை நோக்கி அதிகம் பயன்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. இப்படிப்பட்ட `வார்த்தை முத்திரை ‘குத்தப்படுவது, அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறை கலந்த தவறாகும். அது அவர்களை காயப்படுத்திவிடும்.
குழந்தைகள் மீது தவறான முத்திரைகளை குத்தும் பெற்றோர் இரண்டு விதமான தவறுகளை செய்கிறார்கள். குழந்தையிடம் அப்படிப்பட்ட பழக்கம் உருவாக என்ன காரணம் என்று கண்டறியாமல் இருப்பது முதல் தவறு. அந்த பழக்கத்தில் இருந்து குழந்தையை மீட்க முயற்சிக்காமல், அதையே சொல்லி குற்றஞ்சாட்டுவது இரண்டாவது தவறாகும். பெற்றோர் செய்யும் இந்த இரண்டு தவறுகளும் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கக்கூடியது. 5 முதல் 15 வயதுக்குட்பட்ட காலகட்டம் சிறுவர்- சிறுமியர்களைப் பொறுத்தவரையில் மிக அதிக அளவு. அப்போது அவர்களிடம் சில நடத்தை சிக்கல்கள் தோன்றும். அதை உணர்ந்து அவர்களை வார்த்தைகளால் காயப்படுத்தாமல், சரியாக வழிகாட்ட பெற்றோர்கள் முயற்சிக்க வேண்டும்.
`உன் தம்பிக்கு நீ பேனா, பென்சிலைக்கூட கொடுப்பதில்லை. நீ மிகவும் சுயநலவாதியாக இருக்கிறாய் ‘என்று மூத்தவர்கள் குழந்தைகளை பார்த்து சொல்வதுண்டு. குழந்தைகள் இந்த உலகத்தை புரிந்துகொள்ளாதவரை அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். தேவைப்படுகிறவர்களுக்கு கொடுத்து உதவவேண்டும் என்பதும், தமக்கு தேவைப்படும்போது அவர்களிடம் இருந்து பெறுவது என்பதும் குழந்தைகள் பிறப்பிலே தெரிந்துகொள்ளும் விஷயங்கள் இல்லை. பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்குப் பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுக்கவேண்டும். பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை குடும்பத்திற்குள்ளே தொடங்கவேண்டும்.
சில குழந்தைகள் தனது அறைக்குள் அடுத்த குழந்தைகளை அனுமதிக்கவில்லை. எனினும் பாதுகாப்பு, சுகாதாரம் கருதி குழந்தைகள் அவ்வாறு நடந்துகொள்ளலாம். அதனால் அதையும் எடுத்த எடுப்பிலே குறைசொல்லிவிடக்கூடாது. சக குழந்தைகளோடு பழகவும், விளையாடவும், பொழுதுபோக்கவும் அனுமதிக்க வேண்டும். அதன் மூலம்தான் குழந்தைகளுக்கு பொதுநலன் என்றால் என்னவென்று தெரியும்.