15 வயது சிறுமியை கோயிலுக்குள் வைத்து அர்ச்சகர் துஷ்பிரயோகம் செய்ததையடுத்து, அந்த சைவக் கோயிலை அகற்ற வேண்டுமென பௌத்த பிக்கு தலைமையில் போராட்டம் நடந்துள்ளது.
குளியாபிட்டிய, போஹிங்கமுவ பகுதியில் உள்ள சைவ ஆலயத்தின் முன்பாக நேற்று போராட்டம் நடந்தது.
தனது மகளின் காதல் உறவை முறிப்பதற்காக தாயாரால் இந்த கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 15 வயது சிறுமி, கோயிலுக்குள் வைத்து அர்ச்சகரால் 2 நாட்கள் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டிருந்தார். தற்போது அர்ச்சகர் தலைமறைவாகி விட்டார்.
பாலியல் குற்றவாளியை உடனடியாக தண்டிக்க வேண்டும், தமிழர்கள் இல்லாத இடத்தில் அமைந்துள்ள இந்த கோயிலை உடனடியாக அகற்ற வேண்டுமென போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
தூதுவெவ லங்காநந்த தேரர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் உள்ளிட்ட குழுவொன்று நேற்று கோயிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
ஹெட்டிபொல வீதியில் அர்ச்சகரால் கோயில் அமைக்கப்பட்ட போது சர்ச்சை எழுந்ததை அடுத்து, தற்போதுள்ள இடத்தில் கோயிலை அமைத்ததாகவும், கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட காலம் முதல் அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு பல கடிதங்களை அனுப்பியுள்ளதாகவும், மக்களின் எதிர்ப்புகளையும் தவிர்ப்பதற்காக கோயிலின் முன் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக கோயிலை அகற்ற வேண்டுமென்றும் பௌத்த பிக்கு கூறினார்.



