ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவெனல் மோஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 15 கொலம்பியர்களுடன் இரண்டு அமெரிக்க ‘கூலிப்படையினரும்’ கைது செய்யப்பட்டனர்.
ஜனாதிபதியைக் கொன்ற கும்பலில் 26 கொலம்பியர்களும் இரண்டு ஹெய்டிய அமெரிக்கர்களும் அடங்குவதாக பொலிசார் கூறுகின்றனர்

படுகொலை சதியில் சந்தேகிக்கப்படும் இரண்டு அமெரிக்க குடிமக்களாக ஜேம்ஸ் சோலேஜஸ் மற்றும் ஜோசப் வின்சென்ட் ஆகியோர் ஹெய்ட்டிய பொலிசார் அடையாளம் காணப்பட்டனர். இருவரும் ஹெய்டிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், ஜனாதிபதி ஜோவெனல் மோஸ் கொல்லப்பட்ட வழக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 17 சந்தேக நபர்களில் இவர்களும் உள்ளனர்
தடுத்து வைக்கப்பட்டுள்ள, இறந்த மற்றும் தேடப்படும் சந்தேக நபர்களில் எஞ்சியவர்கள் கொலம்பிய நாட்டவர்கள் என்று பொலிசார் தெரிவிக்கின்றனர்

ஜனாதிபதியை சுட்டுக் கொன்றதுடன், அவரது மனைவியைக் கடுமையாக காயப்படுத்தினர். மகள் தப்பியோடி படுக்கையொன்றின் கீழ் மறைந்திருந்தார்.
ஜனாதிபதி வீட்டுக்கு வந்த துப்பாக்கி ஏந்தியவர்களால் ‘டி.இ.ஏ ஆபரேஷன்’ என்று கூச்சலிட்டனர். தாக்குதலிற்காக அங்கு நுழைந்த போது அவர்கள் அமெரிக்க போதைப்பொருள் அமலாக்க நிர்வாகத்தின் அதிகாரிகள் என்று கூறியே உள்நுழைந்தனர்.

ஜனாதிபதியின் உடலில் 12 துப்பாக்கி ரவைகள் பாய்ந்திருந்தன. மனைவி, கால்கள், கை, உடலில் காயம்பட்டுள்ளார். மியாமியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு ‘ஆபத்தான நிலையில்’ விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார்.

முன்னதாக ஏழு சந்தேக நபர்கள் கொல்லப்பட்டதாகக் கூறிய பின்னர், ஹெய்டியின் தேசிய காவல்துறைத் தலைவரான லியோன் சார்லஸ், இப்போது மூன்று சந்தேக நபர்கள் மட்டுமே பொலிஸாரால் கொல்லப்பட்டதாகக் கூறுகின்றனர், மேலும் 8 பேர் தலைமறைவாக உள்ளதாகவும், இறந்த மற்றும் தேடப்படும் சந்தேக நபர்கள் அனைவரையும் கொலம்பியர்களாக அடையாளம் காட்டுவதாகவும் கூறுகின்றார்.

‘ஜனாதிபதியைக் கொல்ல வெளிநாட்டினர் நம் நாட்டுக்கு வந்தார்கள்’ என்று சார்லஸ் கூறினார்.
வியாழக்கிழமை இரவு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது 17 சந்தேக நபர்கள் தரையில் கைவிலங்குடன் அமர்ந்திருந்தபோது, ”நாங்கள் அவர்களை நீதியின் முன் கொண்டு வரப் போகிறோம்” என்று அவர் கூறினார், அங்கு பலவிதமான ஆயுதங்கள் மற்றும் கொலம்பிய பாஸ்போர்ட்டுகள் ஒரு மேஜையில் அடுக்கப்பட்டிருந்தன.
ஹெய்ட்டிய அமெரிக்கர்கள் காவலில் இருப்பதாக அறிக்கைகள் தெரிந்திருந்தாலும் உறுதிப்படுத்தவோ கருத்து தெரிவிக்கவோ முடியவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் இந்த கொலைக்கான நோக்கத்தை இன்னும் வெளிப்படுத்தவில்லை.
செய்தி மாநாட்டில், காவல்துறைத் தலைவரான சார்லஸ் மக்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். சந்தேகநபர் ஒருவரின் காரை பொதுமக்கள் தீ வைத்திருந்தனர். அதை சுட்டிக்காட்டி, பொலிசார் தங்கள் பணிகளைச் செய்ய அனுமதிக்க வேண்டும், அவர்கள் அழிக்கும் ஆதாரங்கள் அதிகாரிகளுக்குத் தேவை என்று குறிப்பிட்டார்.
இந்த தாக்குதல் ‘அதிக பயிற்சி பெற்ற மற்றும் அதிக ஆயுதமேந்திய குழுவினரால்’ நடத்தப்பட்டது என்று மட்டுமே கூறினார்.
தாக்குதல் குறித்த அரசாங்கத்தின் விளக்கம் மக்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஹெய்ட்டிய முக்கிய நபர் யாரேனும் இதன் பின்னணியில் இருக்கிறார்களோ என அவர்கள் அஞ்சுகிறார்கள்.
தாக்குதலாளிகள் ஜனாதிபதி மோஸின் வீடு, பாதுகாப்பு விவரம் மற்றும் படுக்கை அறைக்குள் எவ்வாறு ஊடுருவி பின்னர் பாதிப்பில்லாமல் தப்பிக்க முடியும் என்று பலர் ஆச்சரியப்பட்டனர். இவ்வளவு கச்சிதமாக செயற்பட்ட கும்பல் எப்படி மொத்தமாக சிக்கிக் கொள்ளும் என்றும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.
ஹெய்ட்டி ஏற்கனவே வறுமை, குழு மோதல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பிடியில் இருப்பதால், நாட்டின் எதிர்காலம் மற்றும் மொய்சின் வாரிசாக யார் இருப்பார்கள் என்ற கேள்விகள் இப்போது அதிகரித்து வருகின்றன.
ஏரியல் ஹென்ரியை புதிய பிரதமராக மொய்ஸ் பெயரிட்ட ஒரு நாளிலேயே மொய்ஸின் படுகொலை நிகழ்ந்தது.
ஹெய்ட்டியில் குழந்தை பருவ பட்டினியை முடிவுக்கு கொண்டுவருவதில் கவனம் செலுத்துகின்ற 2019 ஆம் ஆண்டில் தெற்கு புளோரிடாவில் நிறுவப்பட்ட ஜாக்மெல் ஃபர்ஸ்ட் என்ற தொண்டு நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவராக சோலேஜஸ் உள்ளார்.
ஹைட்டியின் தேர்தல் மற்றும் கட்சி உறவுகள் அமைச்சர் மத்தியாஸ் பியர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் சோலேஜஸின் பின்னணி குறித்து கூடுதல் விவரங்களை வழங்க மாட்டேன் என்று கூறினார். படுகொலையில் அமெரிக்கரின் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதையோ அல்லது அவர்கள் கைது செய்யப்படுவதற்கு என்ன சான்றுகள் கிடைத்தன என்பதையும் அவர் விவரிக்கவில்லை.
அவரது தொண்டு நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவரது சுயவிபரத்தின்படி, சோலேஜஸ் முன்பு ஹெய்ட்டியில் உள்ள கனேடிய தூதரகத்தின் மெய்க்காப்பாளர்களின் தலைமை தளபதியாக பணியாற்றினார் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் நிபுணத்துவம் பெற்ற ஒரு கட்டிட பொறியியலாளர் ஆவார்.
தற்போது, அவர் ஒரு கார்ப்பரேட் நிர்வாகியாக தென் புளோரிடா முழுவதும் வெவ்வேறு இடங்களில் ஆலோசகராக பணியாற்றி வருகிறார், மேலும் ஒரு அரசியல்வாதியாகவும் ‘தொணடு திட்டங்கள் மற்றும் ஆலோசனை பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் தனது நாட்டை மேம்படுத்துகிறார்’ என்றும் பணியாற்றுகிறார் என அவரது சுயவிபரம் கூறுகிறது.
அவர் தன்னை ஒரு ‘இராஜதந்திர முகவர்’, வறிய குழந்தைகளுக்கான சட்டத்தரணி மற்றும் வளர்ந்து வரும் அரசியல்வாதி என்றும் வர்ணிக்கிறார்.
கைதானவர்களில் இரண்டு பேர் புதரில் பதுங்கியிருந்தபோது பொதுமக்களால் பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதற்கு முன்பாக பொதுமக்களால் கடுமையாக தாக்கப்பட்டனர்.
ஹெயிட்டி
கரீபிய, வட அட்லாண்டிக் கடல்களுக்கு இடையில், கியூபாவுக்கு அருகில் அமைந்துள்ள தீவு.
மக்கள்தொகை கிட்டத்தட்ட 11 மில்லியன்.
ஹெயிட்டி என்றதும் நம்மில் பலருக்கு அங்கு 2010ஆம் ஆண்டு நிகழ்ந்த மோசமான நிலநடுக்கம், அதில் மாண்ட 200,000க்கும் அதிகமானோர் ஆகியவை நினைவுக்கு வரும்.
அந்த இயற்கைப் பேரிடர், ஹெயிட்டியின் கட்டமைப்பிலும், பொருளியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அங்கு நிலவிய நெருக்கடியைச் சமாளிக்க ஐக்கிய நாட்டு நிறுவன அமைதிக் குழு 2004இல் ஹெயிட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
2017 வரை அமைதிக்குழு அங்கு செயலாற்றியது.
ஆனால் அது பின்வாங்கிய பிறகும், ஹெயிட்டியில் அமைதி திரும்பவில்லை.
ஹெயிட்டி அரசியல் நெருக்கடி, கடுமையான வறுமை, குற்றங்களுக்கு இடையே தொடர்ந்து போராடி வருகிறது.
கொல்லப்பட்ட ஜனாதிபதி ஜோவேனல் மோயீஸின் பின்னணி
2017ஆம் ஆண்டு பெப்ரவரி 7ஆம் திகதி ஜோவேனல் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
அதற்கு முன், வாழை உற்பத்தித் தொழிலில் அவர் ஈடுபட்டிருந்தார்.
அவர் பொறுப்பேற்கும்போது, ஹெயிட்டி ஓராண்டுக்குத் தலைவர் இல்லாமல் அரசியல் கொந்தளிப்பில் இருந்தது.
பதவியேற்றதிலிருந்து, அவரது நிர்வாகம் பல எதிர்ப்புகளைச் சந்தித்தது.
அரசியல் பின்னணி
அவரது பதவிக் காலம் பெப்ரவரியில் முடிவடைந்திருக்க வேண்டும் என்று எதிர்த்தரப்பு கூறுகிறது.
ஆனால் அதிகாரபூர்வமாக பதவியேற்க ஒரு வருடம் ஆனதால், 2022ஆம் ஆண்டு வரை தமது பதவிக்காலம் நீட்டிக்கப்பட வேண்டும் என்றார் ஜோவேனல்.
53 வயதான ஜனாதிபதி ஜோவேனல் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல்களை நடத்தத் தவறியதாக கூறப்படுகிறது. அவ்வாறு அவர் ஒரு வருடத்திற்கும் மேலாக ஆட்சி செய்து வந்தார்.
ஹெயிட்டியின் அரசமைப்புச் சட்ட மாற்றங்கள் குறித்து ஒரு வாக்கெடுப்பையும் அவர் முன்மொழிந்தார்.
அவர் மீதா தாக்குதலுக்குப் பின் யார் உள்ளனர், அதன் நோக்கம் என்ன என்ற விவரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.
ஆனால், புதிய தலைமைத்துவத்துக்கும் பழைய தலைமைத்துவத்துக்கும் இடையிலான பதவி மோதல் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.