தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) இரண்டாவது முறையாக முன்னெடுத்துள்ள ஒற்றுமை முயற்சியும் பிசுபிசுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே 9 தமிழ் கட்சிகள் இணைந்த ஒற்றுமை முயற்சி முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதை தொடர்வதே பொருத்தமானது என்பதை, தமிழ் தேசிய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தாவினால், செல்வம் அடைக்கலநாதனிற்கு அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்திலேயே இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் தேசிய கட்சி அனுப்பி வைத்த பதில் கடிதத்தில்-
உங்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் மெய்நிகர் கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு எமது கட்சிக்கு விடுக்கப்பட்டிருக்கும் அழைப்புக்கு முதலில் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
குறித்த கலந்துரையாடல் கடந்த வாரம் நிகழவுள்ளதாக அறிவிக்கப்பட்டு, 6 தமிழ்க் கட்சிகளோடு அது மட்டூப்படுத்தப்பட்டிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டு, அந்த ஒத்திவைப்பு தொடர்பில் உங்களால் நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பில், ஒத்திவைப்புக்கான காரணங்கள் உட்பட, பல்வேறு விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்த பின்னணியில், இப்போது எமது கட்சிக்கும், நாம் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் உள்ள இன்னுமோர் கட்சியான ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது, ஊடக சந்திப்பில் நீங்கள் குறிப்பிட்டதைப் போலவே, “தவறுகள்” திருத்தப்பட வேண்டும் என்பதை வெளிப்படுத்தி நிற்பதை நாம் மனப்பூர்வமாக வரவேற்கின்றோம்.
இதே வேளையில், இன்னும் சில கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது எமது கருத்து ஆகும்.
மேலும், இந்த வருடம் தை மாதத்தில் எமது கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட, தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைந்த சந்திப்புகள், உங்கள் கட்சி உட்பட 9 தமிழ்க் கட்சிகளின் பங்களிப்போடு ஆக்கபூர்வமாகவும் ஆரோக்கியமாகவும் தொடர்ந்து நடாத்தப்பட்டிருந்தும், தீவிரம் அடைந்துள்ள கொறோனா பெருந்தொற்று சூழ்நிலையில் தொடர்நடவடிக்கைகள் எடுக்கப்பட முடியாமல், அவை ஸ்தம்பிதம் அடைந்ததை நாம் எல்லோரும் நன்கு அறிவோம்.
இப்போது, இந்த 9 கட்சிகளின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்பதும், இந்த செயல் வட்டத்துக்குள் கொண்டு வரப்பட வேண்டிய, வேறு சில தமிழ்க் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு, எம் இனத்தின் நலன் நாடும் ஒரே நோக்குடன் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்பதும் எமது விருப்பமும் எதிர்பார்ப்பும் ஆகும்.
தமிழ்க் கட்சிகளின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கான சந்திப்புக்களை ஒழுங்கு செய்வதற்கென ஏற்கெனவே அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்டு செயற்பட்டு வந்திருந்த திரு. எம்.கே.சிவாஜிலிங்கம், திரு. சி.வி.கே.சிவஞானம் ஆகிய இருவர் ஊடாக, ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதில், சம்பந்தப்பட்ட கட்சிகள் அனைத்தும் ஒத்துழைக்க வேண்டும் என்பதில் நாம் ஆர்வமாக உள்ளோம்.
விரைவில் ஒருங்கிணைந்த தமிழ்க் கட்சிகளின் நேரடியான சந்திப்பை நடாத்த முடியும் என நாம் நம்புகின்றோம்.
உங்கள் அழைப்புக்கு மீண்டும் நன்றி கூறுவதோடு, உங்கள் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் அன்புரிமையோடூ நாடி நிற்கின்றோம்.