மட்டக்களப்பு – மரப்பாலம் பிரசேத்தில் காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி ஒருவர் இன்று 25.06.2021 உயிரிழந்துள்ளார்.
இலுப்படிச்சேனை பகுதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான 61 வயதுடைய வன்னமணி கிருஸ்ணகுமார் என்பவரே பலியானவரென கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
நெல் வேளாண்மைப் பயிர்ப்பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தவேளை வயலிற்குள் நுழைந்த யானை காவலாளியைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளின் தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக விவசாயிகள் முறையிடுகின்றனர். முறையான யானை வேலி அமைப்பதன் மூலமே விவசாயிகளின் உயிரிகளையும் பயிர்களையும் பாதுகாக்க முடியுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை தவிசாளர் சென்றிருந்தார்.
இதே வேளை யானை வேலி அமைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ். சர்வானந்தன் தெரிவித்தார்.





