சீரற்ற வானிலை காரணமாக ஆறு மாவட்டங்களில் வசிக்கும் 130,837 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்னபுரி, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிவ் வசிப்பவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹாவில் அதிகபட்சமாக 98,052 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,119 குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், பலத்த மழை, கடுமையான காற்று மற்றும் வெள்ளம் காரணமாக 341 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இயற்கை அனர்த்தத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்னொருவர் காணாமல் போயுள்ளார்.
இதற்கிடையில், நேற்று முதல் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக மின் இணைப்புக்களின் மீது மரங்கள் விழுந்ததால் நாடு முழுவதும் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறான சுமார் 2,300 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 44,000 நுகர்வோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.