தனது பெற்றோருடன் சண்டையிட்டுக் கொண்டு, வீட்டுக்கு அருகிலேயே நிலத்தடி சுரங்கம் கிண்டி, வருடங்களாக வாழும் இளைஞன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்பெயினின் லா ரோமானா நகரில் உள்ள தனது குடும்ப வீட்டின், பின்புற தோட்டத்தில் தோண்டப்பட்ட சுரங்க வீட்டில், ஆண்ட்ரஸ் கான்டோ (20) வாழ்ந்து வருகிறார். இப்போது அவர் நடிகராக இருக்கிறார்.
ஆண்ட்ரஸ் கான்டோவுக்கு 14 வயதாக இருந்தபோது, அவர் ஒரு ட்ராக் சூட் அணிந்து உள்ளூர் கிராமத்திற்குள் செல்ல முடியாது என்று பெற்றோரிடம் சொன்னபோது அவர் ஒரு சிறிய வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பெற்றோருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தனது வீட்டின் பின்புறத்திலுள்ள தரையில் கோபமாக தோண்ட தொடங்கினார்.
இலக்கில்லாமல் இப்படி செய்ய ஆரம்பித்தவர், 6 வருடங்களின் பின்னர் இப்பொழுது முழுமையான நிலத்தடி வீடொன்றை அமைத்துள்ளார். படுக்கையறை, முன்பகுதியை கொண்ட அந்த கட்டமைப்பிற்குள் செல்வதற்காக படிகள் அமைத்துள்ளார்.
கோபத்தின் ஆரம்பத்தில், பாடசாலை முடிந்த பின்னர் மாலையில் – வாரத்தில் பல நாட்கள்- கையாலேயே நிலத்தை தோண்டி வந்தார்.
அவரது நண்பர் ஆண்ட்ரூவும் பின்னர் இதில் இணைந்தார். இதையடுத்து சுரங்க பணி வேகமெடுத்தது. இந்த ஜோடி வாரத்தில் 14 மணிநேரம் வரை தனது பெற்றோரின் தோட்டத்தில் வேலை செய்து, கிட்டத்தட்ட 10 அடி தோண்டியது.
ஆரம்பத்தில் அகழப்பட்ட மண்ணை வாளியில் எடுத்து வந்து மேலே கொட்டினார். நாளடைவில், நுட்பங்களை அறிந்து, கப்பி முறையை உருவாக்கினார்.
![](https://pagetamil.com/wp-content/uploads/2021/05/0_PAY-RealPress-HoleHouse-06.jpg)
இந்த நிலத்தடி வீட்டில் தற்போது இரண்டு அறைகள், ஒரு வெப்பமாக்கல் அமைப்பு, வைஃபை மற்றும் ஒரு இசை அமைப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது.
கடும் கோடைகாலத்தில் கூட அங்கு 20 அல்லது 21 டிகிரியில் வெப்பம் நிலவும். இருப்பினும், கனமழையின் போது அவ்வப்போது வெள்ளம் ஏற்படுவதாகவும், பெரும்பாலும் பூச்சிகள், சிலந்திகள் மற்றும் நத்தைகள் நுழைந்து விடுவதாகவும் கூறுகிறார்.
தனது பெற்றோர் அதை கட்டமைப்பதில் எதிர்ப்பாக இருக்கவில்லையென அவர் கூறுகிறார். ஆனால் அது சட்டபூர்வமானதா என்பதை உறுதிப்படுத்த அதிகாரிகள் விஜயம் செய்தனர். எனினும், அவர்கள் அதை சட்டவிரோதமானதாக கூற எந்த வாய்ப்புமிருக்கவில்லையென்கிறார்.