கொரோனா அதிகரிப்பால் மட்டு போதனா வைத்தியசாலையில் ஓட்சிசன் தேவை அதிகரித்துள்ளது எனவே பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்று அவதானமாக செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்ற மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியில் இன்று (30) எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அண்மையிலே சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலே பொதுமக்கள் அதிகளவாக நகர்பகுதியில் நடமாடுவதாகவும் ஒரு சில இடங்களிலே தனியார் வகுப்புக்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே இன்றில் இருந்து தனியார் வகுப்புக்கள் நிறுத்துவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோருக்கு எதிராக சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிசாராலும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே வேளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலே வழக்கமாக ஒரு நாளைக்கு 4 தொடக்கம் 5 சிலிண்டர் ஒட்சிசன் தேவைப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அங்கு கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதன் காரணமாக ஒரு நாளைக்கு 15 சிலிண்டர் ஒட்சிசன் தேவைப்படுகின்றது.
எனவே இதுவரை காலமும் ஒட்சிசனைப்பற்றி சிந்திக்கவில்லை. ஆகவே மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். அதேவேளை பொலிசார் இராணுவத்தினர் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஏற்படுத்துகின்ற கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைப்பிடித்தால்தான் இந்த கொரோனா தொற்றை தடுக்க முடியும்.
அதே வேளை பொதுமக்களை வினையமாக கேட்டுக் கொள்வது மரணச்சடங்குகளில் 25 பேரும், திருமணவீடு அல்லது கோயில் 50 பேருக்கு மேல் கலந்துகொள்ள கூடாது. பொது இடங்களில் அனாவசியமாக கூடக்கூடாது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் உயிர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வீட்டை விட்டுவெளியேறி பொது இடங்களுக்கு செல்லவேண்டாம்.
இந்த 3 ம் கட்ட கொரோனா இளம் சந்ததியினரை தாக்குவது அதிகம். எனவே பொதுமக்கள் அவதானமாக செயற்படவும். இல்லாவிடில் வேறுமாவட்டங்களில் எதிர்நோக்கும் பிரச்சனையை எதிர்நோக்க வேண்டிவரும் என மனவருத்தத்துடன் தெரிவிக்கின்றேன்” என்றார்.