59 வயதாகியும், தனது சகோதர மற்றும் சகோதரிகளுக்காகவே திருமணம் செய்து கொள்ளவில்லை என்று நடிகை கோவை சரளா விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை கோவை சரளா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 250க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் கோவை சரளா மற்றும் வடிவேலுவின் காம்பினேஷன் இன்று ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு ஏன், கரக்காட்டக்காரன் படத்தில் வரும் என்ன திருவாரூர் பார்ட்டியில கூப்பிட்டாக, பொன்னமராவதி பார்ட்டியில கூப்பிட்டாக இவ்வளவு ஏன் காரைக்குடி பார்ட்டியில கூட கூப்பிட்டாக என்ற டயலாக் உள்பட பல டயலாக் கோவை சரளாவுக்கு ஹிட் கொடுத்துள்ளன.
முந்தானை முடிச்சு, சதிலீலாவதி, பூவெல்லாம் உன் வாசம், உலியின் ஓசை, ஷாஜஹான், முனி, முனி 2, முனி 3, காஞ்சனா 3 என்று வரிசையாக மாஸ் படங்களில் நடித்துள்ளார். என்னதான் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் இதுவரையில் திருமணமே செய்து கொள்ளவில்லை. தற்போது அதற்கான காரணத்தை தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் எனது 15ஆவது வயதிலேயே சினிமாவுக்குள் நடிக்க வந்துவிட்டேன். நான் கோவையில் பிறந்து வளர்ந்தேன். எனக்கு 4 சகோதரிகள், ஒரு தம்பி. இவர்களுக்கு திருமணம் செய்து வைத்து இவர்களின் பிள்ளைகளை படிக்க வைத்து வருகிறேன்.
மேலும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு என்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறேன். எனது சகோதர, சகோதரிகளுக்காகவே எனது வாழ்க்கையை தியாகம் செய்ததால் எனக்கு திருமணம் செய்து கொள்ளும் ஆசை வரவேயில்லை என்று கூறியுள்ளார். தற்போது கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து சேவையாற்றி வருகிறார் என்பது குறிப்பிட த்தக்கது.