31.3 C
Jaffna
March 28, 2024
இலங்கை

முன்னாள் ஜனாதிபதி, பொலிஸ்மா அதிபரை கைது செய்யாமல் ரிஷாத்தை கைது செய்தது அரசியல் நோக்கமே!

ஈஸ்டர் தாக்குதலின் பின்னராக அதனோடு சம்மந்தப்பட்ட குற்றவாளிகளைக் இனங்காண்பதற்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அந்த அறிக்கையில் மிக முக்கியமான குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள எவர் தொடர்பாகவும் எடுத்துக் காட்டாக முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பொலிஸ் மாஅதிபர் போன்றோருக்கு எதிராக பரிந்துரைக்கப்பட்ட எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காமல், வெறுமனே அரசியல் நோக்கங்களுக்காக, எந்தக் குற்றமும் இழைக்காத, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்களை, நள்ளிரவு 3 மணிக்கு அவரது வீட்டுக்குச் சென்று சபாநாயகருக்குக் கூட அறிவிக்காது, எந்தவித பிடியாணையும் இல்லாமல் கைது செய்திருப்பதானது வன்மையாகக் கண்டிக்கப்படக்கூடிய விடயமாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி SMM முஷாரப் தெரிவித்தார்.

இந்தப் புனித ரமழான் மாதத்தில் இது மிகவும் வேதனையைத் தருகின்ற விடயமாகவும் இருக்கிறது. இனவாதத்தை இலங்கையின் விதைத்து, இனங்களுக்கிடையான விரிசலை ஏற்படுத்திய பொது பல சேனா போன்ற அமைப்புகளை தடை செய்ய வேண்டுமென அறிக்கையில் குறிப்பிடப்பட்ட நிலையிலும், அந்த அமைப்புகளை எதுவும் செய்யாமல், இந்தக் தாக்குதலுடன் எந்த விதத்திலும் தொடர்பில்லாத முஸ்லிம்களின் அமைப்புகளை பொதுவாக தடை செய்திருப்பதானதும் அரசாங்கத்தின் இனவாத நோக்கத்தையே வெளிக்காட்டுகிறது.

முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரின் அழைப்பை ஏற்று, அங்கு சென்று தனது சாட்சியங்களை தொடர்ச்சியாக வழங்கி ஒத்துழைப்பை வழங்கி வந்தார்.

இந்தத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை கண்டடைய வேண்டுமென்பதில், மிகவும் கரிசணையோடு செயற்பட்டு அதற்கு தேவையான தகவல்களையும் குற்றவியல் புலனாய்வுப் பிரிவுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கியுமுள்ளார்.

இவ்வாறு தொடர்ச்சியாக விசாரணைகளுக்கு முழுக்க முழுக்க தனது பூரண ஒத்துழைப்பை வழங்கிய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களை நடுநிசியில் கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? என பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி SMM முஷாரப் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது அரசியல் ஆதாயத்திற்காகவும், ஒரு மக்கள் குழுவை திருப்திப்படுத்துவதற்கும் செய்யப்படும் செயலாகவே கண்டு கொள்ள முடிகிறது.

ஆனாலும், இந்தக் சட்டரீதியற்ற முறைமையில்லாத தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் கைதை பெரும்பான்மை சமூக மக்களும் கண்டனத்துக்குரிய விடயமாகப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இந்தக் கைதுக்கு எதிராக கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி யாரோ இருப்பதாக பல தரப்புகளாலும் சுட்டிக் காட்டப்படுகின்ற சூழ்நிலையில், குறித்த குற்றவாளிகளை கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு, தோராயமாக குற்றவாளிகளை தேர்ந்தெடுத்து தெரிவிப்பதையும் ஒரு சாராரை திருப்திப்படுத்துகின்ற கீழ்த்தரமான அரசியல் வங்குரோத்து நிலையையும் அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தை தொடர்ச்சியாக வெறுமனே தாக்குகின்ற மனதளவில் பாதிப்படையச் செய்கின்ற அரசியல் லாபங்களுக்காக செய்யப்படுகின்ற அத்தனை விடயங்களும் நிறுத்தப்பட வேண்டும்.

குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கிறோம் என்ற தோரணையில் மீண்டும் மீண்டும் முஸ்லிம் சமூகத்தை நோக்கி, முஸ்லிம் தலைமைகளை நோக்கி, முஸ்லிம் புத்திஜீவிகளை நோக்கிச் செய்யப்படுகின்ற அபாண்டமாக பலி சுமத்துகின்ற ஆட்சியாளர்களின் அல்லது அதிகாரிகளின் போக்கு மாற்றப்பட வேண்டும்.

சகல இனங்களும் ஒன்றாக வாழ்வதற்கான சூழலை உருவாக்கி நாட்டை கட்டியெழுப்பத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டுமே அல்லாமல், எந்தக் குற்றமும் இழைக்காத முன்னாள் அமைச்சரை தொடர்ச்சியாக அரசியல் லாபங்களுக்காக கைது செய்வதையும், விசாரணை செய்வதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி SMM முஷாரப் மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

ரொஷான் ரணசிங்க வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு!

Pagetamil

புத்தரின் படம் பொறித்த முடிவெட்டும் இயந்திரத்தை வைத்திருந்தவர் கைது!

Pagetamil

நுவரெலியாவில் சிக்கிய பெரும் போதைப்பொருள் கடத்தல்காரன்

Pagetamil

முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீதி விபத்தில் பலி

Pagetamil

Leave a Comment