29.3 C
Jaffna
March 29, 2024
உலகம் முக்கியச் செய்திகள்

60 ஆண்டுகள் சகாப்தம் முடிவுக்கு வருகிறது; கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரவுல் கஸ்ரோ விலகுகிறார்!

அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு சிம்ம சொப்பனமாகத் திகழந்துவரும் குட்டி நாடான கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ரவுல் கஸ்ரோ அறிவித்துள்ளார்.

ஏறக்குறைய 60 ஆண்டுகளாக கஸ்ரோ குடும்பத்தினர் கியூபன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களாக இருந்த நிலையில் அந்த மாபெரும் சகாப்தம் முடிவுக்கு வருகிறது. அடுத்தும் நாட்டை ஆளவரும் இளம் தலைமுறையினருக்கு பொறுப்புகளை வழங்குவதாகக் கூறி ரவுல் கஸ்ரோ பதவி விலக உள்ளார்.

1959ம் ஆண்டு பிடல் கஸ்ரோ தலைமையில் ஏற்பட்ட புரட்சியைத் தொடர்ந்து சர்வாதிகாரி பாடிஸ்டுடாவின் ஆட்சி அகற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து பிடல் கஸ்ரோ கியூப ஜனாதிபதியானார். அன்று முதல் கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து கியூபாவின் அசைக்க முடியாத தலைவராக விளங்கி வந்தார் பிடல்.

அமெரிக்காவின் பல்வேறு தடைகள், கொலை முயற்சிகள் (கிட்டத்தட்ட 600 முறை ), பொருளாதாரத் தடை ஆகியவற்றைத் தாண்டி இரும்பு மனிதராக கியூபாவை பிடல் வழி நடத்தி வந்தார்.

கடந்த 2006ஆம் ஆண்டு ஃபிடல் கஸ்ரோவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட ரவுல் கஸ்ரோ 2008இல் முறைப்படி ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். 2011ஆம் ஆண்டு கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

அவரது ஐந்தாண்டு பதவிக் காலம் முடிந்து, 2வது முறை ஜனாதிபதியாக ரவுல் கஸ்ரோ நேற்று மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். கியூபாவின் அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒரு ஜனாதிபதி இருமுறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்பதால், ஜனாதிபதி பொறுப்பிலிருந்து விலகிய ரவுல் கஸ்ரோ கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.

ராவுல் கஸ்ரோ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பரமவைரியான அமெரிக்காவுடன் நட்பு பாராட்டினார். 2014ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக இருந்த பாரக் ஒபாமாவுடன் ரவுல் கஸ்ரோ சந்தித்து பேசினார். காலங்காலமாக எதிரியாக இருந்த அமெரிக்காவுடன் கியூபா ஜனாதிபதி ரவுல் கஸ்ரோ நட்பாக சென்றது உலக நாடுகளிடையே வரவேற்பைப் பெற்றது. கியூபா மீது விதிக்கப்பட்ட பல்வேறு தடைகளும் அப்போதைய ஜனாதிபதி ஒபாமாவால் விலக்கப்பட்டன. ஆனால், அதைத்தொடர்ந்து வந்த ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் பல பொருளாதாரத் தடைகளை கியூபா மீது விதித்தார்.

ஏறக்குறைய 60 ஆண்டு காலம், உலகில் கியூபாவின் முகமாக, கம்யூனிஸத்தின் முகமாக கஸ்ரோ சகோதரர்கள் இருந்து வருகிறார்கள். ஆனால், இந்த சகாப்தம் விரைவில் முடிகிறது.

இந்நிலையில் கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில்தான் கம்யூனிஸ்ட்கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ரவுல் கஸ்ரோ அறிவித்தார்.

இ்ந்தக் கூட்டத்தில் ரவுல் கஸ்ரோ பேசுகையில் “ நான் எனக்கு வழங்கப்பட்ட இலக்கை, பணியை முடித்துவிட்டதாக மனநிறைவு கொள்கிறேன். இனி என்னுடைய மண்ணை எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்கும் நம்பிக்கை வந்துள்ளது” என அறிவித்தார்.

ஆனால், தனக்குப்பின் யாரை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக நியமிக்கப்போகிறார் என்பது குறித்து ரவுல் கஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், ரவுல் கஸ்ரோவுக்கு அடுத்தஇடத்தில் இருக்கும் 60 வயதான மிகுல் டியாஸ் கேனல் அந்த பதவியை ஏற்பார் எனத் தெரிகிறது.

ரவுல் கஸ்ரோவின் இந்த அறிவிப்பால் கியூபாவில் 60 ஆண்டுகாலம் ஆட்சியில் இந்த கஸ்ரோ குடும்பத்தினரின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது.

ஆனால், கியூவில் இப்போது மிகமோசமான பொருளாதார சூழல் நிலவும்போது, ஆட்சி மாற்றம், தலைமை மாற்றம் மிகவும் கடினமானதாக இருக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று, அதிக வேதனைகள் நிறைந்த நிதிச்சீர்த்திருத்தங்கள், ட்ரம்ப் நிர்வாகம் பிறப்பித்த கடும் பொருளாதாரத் தடைகள் போன்றவற்றால் பொருளாதாரம் கடந்த ஆண்டு 11 சதவீதம் சரிந்தது. சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. உணவுக்காக மக்கள் நீண்ட வரிைசயில் நிற்பதையும், சமூகத்தில் அதிகரித்துள்ள ஏற்ற தாழ்வுகளையும் பல நகரங்களில் காண முடிகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

Leave a Comment