ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகிவரும் படத்தில் சல்மான் கான் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. படப்பிடிப்புத் தளத்தில் விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதியிலேயே தடைப்பட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. விரைவில் தொடங்குவதற்கு ஆயத்தமாகி வருகிறது.
அதற்கு முன்னதாகவே ஷங்கர் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் 50-வது படமாக இது உருவாகிறது.
இதில் நாயகனாக தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் நடிக்கவுள்ளார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் சல்மான் கானிடம் ஷங்கர் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதாக பாலிவுட் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. படத்தில் ஒரு புத்திசாலி போலீஸ் அதிகாரி வேடம் உள்ளதாகவும், அதில் நடிக்கவே சல்மான் கானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் படக்குழுவினர் தரப்பிலிருந்து வெளியாகவில்லை.
தற்போது பிரபுதேவா இயக்கத்தில் ‘ராதே’ என்ற படத்தில் சல்மான் கான் நடித்து வருகிறார். இப்படம் வரும் ரம்ழான் பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.




