நாடான்ஸ் அணு உலையில் ஏற்பட்ட விபத்து பயங்கரவாத சதிச் செயல் என்று ஈரான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை ஈரான் அரசு வெளியிட்ட அறிக்கையில், “நாடான்ஸ் ஆலையின் ஒரு பகுதியில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டது . பயங்கரவாத சதி காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கதிரியக்கக் கசிவு ஏதும் ஏற்படவில்லை. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இஸ்ரேல், சைபர் தாக்குதல் மூலம் இதனை நடத்தி இருக்கலாம் என ஈரான் சந்தேகிப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒஸ்திரிய தலைநகர் வியன்னாவில் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் – அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே சமீபத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ஈரான் – அமெரிக்கா மோதல்
அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே 2015இல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார்.
மேலும், ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வந்தார். இதற்கு பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறியது. இந்நிலையில் டெஹ்ரானுக்கு தெற்கே ஃபோர்டோ என்ற இடத்தில் மலைக்கு அடியில் உள்ள ஆலையில், 2015இல் நிறுத்தப்பட்ட யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் நவம்பர் மாதம் தொடங்கியது.
இதன் காரணமாக ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வந்தது. இந்த நிலையில் ஜோ பைடன் தலைமையிலான புதிய நிர்வாகம் ஈரானுடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முனைப்பு காட்டி வருகிறது.