காலமாகிய தந்தையின் மெழுகு சிலை முன்பாக மகள் திருமணம் செய்துகொண்ட நெகிழ்ச்சி சம்பவம் திருச்சியில்இடம்பெற்றுள்ளது.
திருச்சி உய்யகொண்டான் திருமலையை சேர்ந்தவர் ராஜேந்திரன். ஓய்வுபெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவருடைய மனைவி மல்லிகா (55). இவர் திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் சப்இன்ஸ்பெக்டராக உள்ளார். ராஜேந்திரன் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார்.
இந்தநிலையில் மல்லிகாவின் மூத்த மகள் ஜெயலட்சுமிக்கும், மும்பையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் கீர்த்திவாசனுக்கும் திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள ரெயில்வே மண்டபத்தில் நேற்று திருமணம் நடந்தது. தந்தை மீது அதிகபாசம் கொண்ட ஜெயலட்சுமி தனது திருமணத்துக்கு தந்தை இல்லையே என சோகத்தில் இருந்தார்.
இந்த குறையை போக்க மல்லிகா குடும்பத்தினர் ரூ.3 லட்சம் செலவில் ராஜேந்திரனின் மெழுகு சிலையை தயாரிக்க பெங்களூருவில் முன்பதிவு கொடுத்தனர். ராஜேந்திரன் அமர்ந்து இருப்பது போல் மெழுகுசிலை தத்ரூபமாக உருவாக்கப்பட்டது.
இந்த சிலையை புரோகிதர்கள் முன் வைத்து திருமண சடங்குகள் நடந்தது. அப்போது பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற ஜெயலட்சுமி தந்தையின் மெழுகுசிலையை பார்த்து கண்ணீர் விட்டார். இதை கண்டு திருமண மண்டபத்துக்கு வந்த உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.