மன்னார் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முறையற்ற மணல் அகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் தேவைகளின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் முறையான மண் அகழ்வுக்கு மாத்திரம் அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் மண் அகழ்வு தொடர்பான சட்ட அமுலாக்கம் கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இன்று திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக மாவட்ட ரீதியில் இடம் பெற்றும் சட்டவிரோத மண் அகழ்வுகள் இடம்பெறுகின்ற இடங்களை உரிய திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து கள விஜயம் மேற்கொண்டு பார்வையிடப்பட்டது.
இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை(29) குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் சட்ட அமுலாக்க கூட்டம் இடம் பெற்றது.
இதன் போது மண் அகழ்வு தொடர்பில் தெளிவு படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு தீர்மானம் மேற்கொள்ள்ளப்பட்டது.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மணல் அகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டதுடன் நபர் ஒருவருக்கு வழங்கும் மண் அனுமதி பத்திரத்தை வரையறுப்பதுடன் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் மணல் அகழ்வுக்கான அனுமதி வழங்குவதாகவும் அதே நேரம் உரிய கண்கானிப்பின் பின்னர் உரிய திணைக்களங்களினால் மண் அகழ்வுக்கான அனுமதி வழங்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் பிரதேசச் செயலாளர்கள், பிரதேச சபையின் தவிசாளர்,புவி சரீதவியல் திணைக்களம், பொலிஸ்,விசேட அதிரடிப்படை, இராணுவம், நீர்ப்பாசன திணைக்களம், மாவட்டச் செயலக காணி திட்டமிடல் பிரிவு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, கம நல சேவைகள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் உள்ளடங்களாக அழைக்கப்பட்ட திணகை;கள பிரதி நிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.