இந்திய அணியின் கப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 9வது முறையாக இங்கிலாந்து லெக் ஸ்பின்னர் அதில் ரிஷித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
புனேவில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 22வது ஓவரை ரஷித் வீசினார். களத்தில் 79 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்த நிலையில் ஆடிய கோலி, விக்கெட் கீப்பர் பட்லரிடம் கட்ச் கொடுத்து ரஷித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ரஷித் பந்துவீச்சில் கோலி ஆட்டமிழப்பது இது 9வது முறையாகும். சர்வதேச கிரிக்கெட்டில் கோலியை அதிகமாக அதாவது 10 முறை நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுதி ஆட்டமிழக்கச் செய்துள்ளார். அடுத்தாற்போல், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்ஸனும், இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்துவீச்சளர் கிரேம் ஸ்வான் இருவரும் 8 முறை கோலியை ஆட்டமிழக்கச் செய்துள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்கூட கோலியை 2 முறை அதில் ரஷித்தான் ஆட்டமிழக்கச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக கோலி பலவீனமான வீரர் என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.
கோலி 10,000!
கிரிக்கெட்டில் 3வது வீரராகக் களமிறங்கி 10 ஆயிரம் ரன்களைச் சேர்த்து கோலி புதிய வரலாறு படைத்துள்ளார். அவுஸ்திரேலியாவின் முன்னாள் கப்டன் ரிக்கி பொண்டிங்கிற்கு அடுத்தாற்போல், 3வது நிலையில் களமிறங்கி 10 ஆயிரம் ரன்களைச் சேர்த்த 2வது வீரர் எனும் பெருமையை கோலி பெற்றார். இந்திய அணி அளவில் கோலிதான் முதல் வீரர் ஆவார். தன்னுடைய 190வது இன்னிங்ஸில் கோலி 10 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார்.
3வது இடத்தில் இலங்கை அணியின் முன்னாள் கப்டன் குமார் சங்கக்கர (9,747 ரன்கள்), அதைத் தொடர்ந்து தென்னாபிரிக்க முன்னாள் கப்டன் ஜக்ஸ் கலிஸ் (7,774 ரன்கள்) உள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் கப்டனாக இருந்து அதிகமான ரன்கள் அடித்த வரிசையில் தென்னாபிரிக்க முன்னாள் கப்டன் கிரேம் ஸ்மித்தை முந்தியுள்ளார் விராட் கோலி.
தென்னாபிரிக்க அணியின் முன்னாள் கப்டன் கிரேம் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் கப்டனாக இருந்து 5,414 ரன்கள் குவித்துள்ளார். தற்போது விராட் கோலி 93 ஒருநாள் போட்டிகளில் 5,376 ரன்கள் குவித்திருந்தார்.