யாழில் முதலிரவிற்கு சென்ற மனைவி கடிதமெழுதி வைத்து விட்டு மாயமாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு தினங்களின் முன்னர் வலிகாமம் பகுதியில் திருமணம் ஒன்று இடம்பெற்றது. அதை தொடர்ந்து அந்த ஜோடி, அன்று இரவு யாழ் நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அன்று மாலையில் விடுதிக்கு வந்த ஜோடி தங்கியிருந்துள்ளனர். விடுதியின் மாடியறை அவர்களிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அறைக்கு வந்த சிறிது நேரத்தில், மணமகன் குளியலறைக்கு சென்றுள்ளார்
இதன்போது, தனது நெருங்கிய நண்பி அங்கு பணிபுரிவதாகவும், அவருடன் பேசி விட்டு ஓரிரு நிமிடத்தில் திரும்பி வருவதாகவும் மணப்பெண் கூறிவிட்டு கீழே இறங்கி சென்றுள்ளார்.
குளித்துவிட்டு வந்த கணவன், மனைவியை காணாமல் தொலைபேசி அழைப்பேற்படுத்திய போதும், அவரது தொலைபேசி நிறுத்தப்பட்டிருந்தது.
இதன்போது, அறைக்குள் மனைவி எழுதி வைத்து விட்டு சென்ற சிறிய குறிப்பொன்றை கணவன் கண்டெடுத்துள்ளார். தன்னை மன்னிக்கும்படியும், தனது காதலனுடன் வாழச் செல்வதாகவும், தன்னை மன்னிக்கும்படியும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் விட்டுச்சென்ற பையில் தாலி உள்ளிட்ட சில நகைகளும் காணப்பட்டுள்ளன. அதில் ஒரு சங்கிலியை தாயாரிடம் ஒப்படைக்கும்படி குறிப்பிட்டுள்ளார்.
மணப்பெண் விடுதியிலிருந்து வெளியேறி, மோட்டார் சைக்கிளில் இன்னொரு இளைஞனுடன் ஏறிச்செல்லும் காட்சிகள் சிசிரிவியில் பதிவாகியுள்ளன.
உரும்பிராயை சேர்ந்த யுவதி, அந்த பகுதி இளைஞன் ஒருவரை காதலித்து வந்த நிலையில், அவரது விருப்பமின்றி கொழும்பு வர்த்தக குடும்பமொன்றில் திருமணம் செய்து கொடுத்துள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிய வருகிறது.