அறிமுகமாகி இரண்டு ஆண்டுகள் கூட ஆகவில்லை என்றாலும் இந்தியாவில் டிக்டாக்கின் பயணம் பெரியது. ராக்கெட் வேக வளர்ச்சி, கூகுளின் சிறந்த ஆப் விருது, தற்காலிக தடை என இந்த குறுகிய காலத்தில் டிக்டாக்கை சுற்றி அத்தனை நிகழ்வுகள் நடந்தேறிவிட்டது. இன்றும் டிக் டாக் என்றால் ஒரு ‘ஆபாச’ பிம்பம் சிலருக்கு இருக்கிறது. ஆனால் நாங்கள் கிரியேட்டிவ் பிளாட்,பார்ம்தான் அழுத்திச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஆனால், இந்த பிம்பம் உடைந்ததாக இல்லை. இந்த மார்ச் மாதம் டிக்டாக்கில் பதிவாகும் வீடியோக்களை தரம் பிரிக்க அனைத்து முக்கிய மொழிகளுக்கும் ஒன்றிணைந்த பாதுகாப்பு மையம் ஒன்றை நிறுவியது அந்த நிறுவனம். இது எதுவுமே டிக் டாக் மீது பூசப்பட்ட சாயத்தை அழிக்கவில்லை. இதனால் செயலில் இறங்கிவிடுவோம் என #Edutok என்ற பிரச்சாரத்தை தங்கள் தளத்தில் தொடங்கியது டிக் டாக்.
டிக்டாக் மூலம் மக்களுக்குப் பயனுள்ள விஷயங்களைப் பதிவிட வலியுறுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்தான் #Edutok. இதில் பலரும் வீடியோக்கள் பதிவிட்டிருக்கின்றனர்.
உதாரணத்திற்கு 15 செகண்ட் வீடியோவில் ஒரு ஆங்கில வாக்கியம் கற்றுக்கொடுப்பது, அறிவியல் தொடர்பான விஷயங்களை ஜாலியாக கிரியேட்டிவ்வாக விளக்குவது, பிட்னஸ் டிப்ஸ், அரசு தேர்வுகளுக்கு எப்படி தயாராவது போன்ற பல வீடியோக்கள் இதில் பதிவானது. இது அனைத்துமே தன்னார்வலர்கள் தானாக உருவாக்கியதுதான். இப்போது இதை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்ல Toppr, Vedantu, Made Easy, GradeUp போன்ற ஈ-லேர்னிங் தளங்களுடன் கூட்டணி வைத்து வீடியோக்கள் வெளியிட முடிவு செய்துள்ளது டிக் டாக்.
15 செகண்ட் வீடியோவால் என்ன மாற்றம் நடந்துவிடப் போகிறது’ என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆனால் சிறிய அளவில் மாற்றம் நடந்தாலும் அது மாற்றம்தான். இந்தியாவின் குடிமகன் வரை சென்று சேர்ந்திருக்கும் சமூக வலைதளம் டிக் டாக் தான். இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட இணையப் பயனாளர்களை(அப்படிதான் டெக் நிறுவனங்கள் பிரிக்கின்றனர்) பேஸ்புக், ட்விட்டரை விடவும் அதிகம் பெற்றிருப்பது டிக்டாக்தான். அவர்களுக்கு அறிவார்ந்த விஷயங்களை வீடியோக்கள் வழி எடுத்துச்செல்லும் ஆற்றல் டிக் டாக்கிடம் மட்டுமே இருக்கிறது.
சொல்லப்போனால் இன்று பலரும் யூடியூப் வீடியோக்கள் பார்த்துதான் டிகிரியே முடித்திருக்கின்றனர். ரயில் நிலைய இலவச Wifi உதவியுடன் அரசுவேலைக்கு சென்றிருக்கின்றனர் மக்கள். . இப்படி தினமும் இணையம் கற்றலுக்கு அளிக்கும் ஆயிரம் வாய்ப்புகளை நம்முன் வைத்துக்கொண்டே இருக்கிறது.