புலம்பெயர்ந்து வாழும் யாழ்ப்பாண தமிழ்ப் பெண்ணை காதலிப்பதாக நடித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி சுமார் 70 இலட்சம் ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில், நடிகர் ஆர்யாவிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது ஜேர்மனியில் வசிக்கும் தமிழ் பெண் வித்யா என்பவரால் இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, விசாரணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக இருந்த, நடிகர் ஆர்யா என்கிற ஜம்சத், 40 வயதில் பச்சை மண்ணாண சாயிஷாவை காதலித்து திருமணம் செய்தார்.
தற்போது ப.ரஞ்சித் இயக்கத்தில் சர்பட்டா பரம்பரை படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்து வரும் ஆர்யா மீது, யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்ட தமிழ்ப்பெண் வித்யா காதல் திருமண மோசடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வித்யா ஜெர்மனியில் குடியுரிமை பெற்று அங்குள்ள சுகாதாரத்துறையில் பணி புரிந்து வருகிறார். கொரோனா லொக்டவுன் நேரத்தில் வித்யாவுக்கு ஒன்லைன் மூலம் காதல்வலை விரித்த நடிகர் ஆர்யா, அவரை காதலிப்பது போல நடித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
ஆர்யாவின் காதல் வலையில் மாட்டிய வித்யா, தமிழ் சினிமா நடிகர் ஒருவரை மணந்த பெருமையுடன் வாழலாமென மனக்கோட்டை கட்டியுள்ளார்.
காதல் வலைவிரித்த சமயத்தில், தன்னிடமிருந்து 70 இலட்சத்து 40,000 ஆயிரம் ரூபாய் பெற்றதாகவும், இப்பொழுது திருமணம் செய்து கொள்ள மறுத்ததோடு, பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார்.
இதைதொடர்ந்து, நடிகர் ஆர்யா மீது ,பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஒன் லைன் வழியாக புகார் அளித்துள்ளார் வித்யா. தனக்கும், நடிகர் ஆர்யாவின் தாயாருக்கும் நடந்த வாக்குவாதங்கள், பண பரிவர்த்தனைகளுக்கான ஆதாரங்களையும் தன் புகாரில் அவர் இணைத்துள்ளார்.
வித்யா அளித்துள்ள புகாரில், கொரோனா லொக்டவுன் காரணமாக தனக்கு கைவசம் படங்கள் இல்லை. இதனால், பணத்துக்கு கஷ்டப்படுவதாக ஆர்யா தன்னிடத்தில் கூறினார் என்றும், உன்னை நான் விரும்புகிறேன், திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்படுகிறேன் என்றும் கூறியதாக தெரிவித்துள்ளார்.
தன்னிடத்தில் இருந்து பணத்தை பெற்றதாகவும், சில மாதங்கள் கழித்து தன்னைப் போல பல பெண்களை அவர் ஏமாற்றியுள்ளது தனக்கு தெரிய வந்ததாகவும் கூறுகிறார், தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது, ஆர்யாவின் தாயார் ஜமீலா என்னை மோசமாக திட்டினார். ‘ஒரு சிறிலங்கா நாயின் மகள் நீ… போரினால் உலகமெல்லாம் போய் அசிங்கப்படுறீங்க’ என்று மோசமான வார்த்தைகளால் தன்னை திட்டியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
வித்யா மேலும் கூறுகையில், இந்த விஷயத்தில் பிரதமர் அலுவலகமும், உள்துறை அமைச்சகமும் தலையிட்டதால் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புவதாகவும், தற்போது ஆர்யா மீது புகார் கொடுத்துள்ளதால், அதனை வாபஸ் பெற வேண்டும் எனவும் இல்லையேல் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும், நடிகர் ஆர்யா தன்னை மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகர் ஆர்யா எப்படி நாடகம் போட்டாலும் தனது புகாரை வாபஸ் பெறப் போவதில்லை என்றும், கடந்த சில வருடங்களாக நான் பட்ட துயரத்துக்கு அளவே இல்லை என்றும் வித்யா தெரிவித்துள்ளார். நான் பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் வர வேண்டும். எனக்கு நீதியும் வேண்டும். இந்த விஷயத்தில் அக்கறை காட்டியதற்காக பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் வித்யா கூறியுள்ளார்.

இந்த புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. உள்துறை அமைச்சக செயலாளர் கோபால் ஜா, தமிழ்நாடு முதலமைச்சரின் தனிபிரிவு சிறப்பு அதிகாரி சரவணவேல்ராஜ் ஐ.ஏ.எஸ்-க்கு புகாரை அனுப்பியுள்ளார். விரைவில், தமிழக அரசு நல்ல நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவும் வித்யா தெரிவித்துள்ளார்.
முன்னதாக , ‘எங்க வீட்டு மாப்பிள்ளை ‘என்ற நிகழ்ச்சியின் மூலம் நடிகர் ஆர்யா தனக்கு பெண் தேடும் படலத்தில் ஈடுபட்டார். அதில் 16 பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது, இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் இருந்து தனக்கு மனைவியை தேர்வு செய்யாத நடிகர் ஆர்யா, நடிகை ஷாயிஷாவை காதலித்து திருமண செய்து கொண்டது குறிப்பிடதக்கது.
முதற்கட்ட விசாரணையில் வித்யாவிடம் இருந்து 70 இலட்சம் ரூபாய் பணத்தை வெஸ்டர்ன் யூனியன் மனி டிரான்ஸ்பர் மூலம் ஆர்யா தனது மேலாளர் முகமது ஹூசைனி என்பவரது வங்கி கணக்கில் பெற்றது உறுதியாகி உள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த புகார் குறித்து விளக்கம் பெற ஆர்யாவை தொடர்பு கொண்ட போது அவர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.