எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார்.
அவரது பேஸ்புக் பதிவு வருமாறு-
26.03.2025 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணி
எதிர்வரும் 03.04.2025 அன்று வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளின் போட் பிளேயருக்கு அண்மையாக காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.
இது எதிர்வரும் 5ம் திகதியளவில் தாழமுக்கமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இதன் நகர்வுப் பாதை மற்றும் கரையைக் கடக்கும் இடம் பற்றி அடுத்த சில நாட்களின் பின்னரே உறுதிப்படுத்த முடியும்.
இத்தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் 03.04.2025 முதல் 10.04.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
சிறு போக நெற் செய்கைக்கான ஆரம்ப நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் இதனைக் கருத்தில் கொண்டு செயற்படுவது சிறந்தது.
அதேவேளை எதிர்வரும் 05.04.2025 முதல் 09.04.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.
மேலதிக விபரங்கள் தொடர்ந்தும் இற்றைப்படுத்தப்படும்.