யாழ்ப்பாணம்- மிருசுவில் படுகொலை தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவச் சிப்பாய் சுனில் ரத்நாயக்கவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடை விதித்துள்ளது.
மார்ச் 2020 இல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவச்சிப்பாய் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வழக்கில் உள்ள அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் 08 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது. வழக்கின் இறுதித் தீர்ப்பை அதன் பின்னர் வழங்குவதாக ஒத்திவைத்துள்ளது.
முன்னாள் இராணுவச்சிப்பாய் சுனில் ரத்நாயக்க 2000 டிசம்பரில் யாழ்ப்பாணத்தில் உள்ள மிருசுவில் 8 பொதுமக்களைக் கொன்ற வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
2020 ஆம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுனில் ரத்நாயக்கவை மன்னித்து விடுவித்தார்.
மிருசுவில் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும், ஜனாதிபதி மன்னிப்பை எதிர்த்து கொள்கை மாற்று மையமும் மனுக்களை தாக்கல் செய்தன.