திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தர்ஹா நகர் பகுதியில் இரண்டு பெண்கள், வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்்
இச்சம்பவம் இன்று (14) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் வயதான சகோதரிகள் இருவர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பெண் ஒருவரின் பேத்தியான 15 வயது சிறுமி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் தந்தை மத்திய கிழக்கு நாட்டில் தொழில் நிமித்தம் தங்கியுள்ளார். தாயார் குடும்பநல மாதுவாக பணியாற்றுகிறார். தாயார், 15 வயது மகள், மற்றும் இரண்டு பிள்ளைகளுடன், அம்மம்மாவும், சகோதரியும் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இன்று அதிகாலையளவில் 15 வயது சிறுமி அயல்வீட்டாருக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி, திருடன் வீட்டுக்குள் நுழைந்து வெட்டிவிட்டு சென்றுவிட்டதாக தகவல் அளித்துள்ளார்.
எனினும், வீட்டு கதவுகள் பூட்டப்பட்டிருந்ததாகவும், அயலவர்கள் கதவை உடைத்து, உள்ளே நுழைந்ததாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர், மூதூர் பொலிஸார் நடத்திய விசாரணையில், குறித்த சிறுமியே இந்த இரட்டைக் கொலையைச் செய்திருப்பது தெரியவந்தது.
அதன்படி, கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டபோது, இரட்டைக் கொலையைச் செய்ததை அவர் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனது இரண்டு பாட்டிகளும் தன்னை விட மற்ற இரண்டு பேரக்குழந்தைகளை நன்றாக நடத்துவதன் காரணமாக தனக்கு ஏற்பட்ட விரக்தியில் இந்தக் கொலையைச் செய்ததாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
கொலைகளின் போது கூரிய ஆயுதம் பயன்படுத்தியதால் தனது கையிலும் காயம் ஏற்பட்டதாக அவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டார்.
சிறுமியின் தாய் இரவில் வேலைக்கு சென்றிருந்த போதே இந்தக் கொலைகள் நடந்துள்ளது.
சந்தேகநபரான சிறுமி நாளை (15) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும், கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் அறிவுறுத்தலின் பேரில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிதரன் ராஜேஸ்வரி (68வயது) மற்றும் அவரது பெரியம்மாவான சக்திவேல் ராஜகுமாரி (74வயது) ஆகிய இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.