ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (15.12.2024 – ஞாயிற்றுக் கிழமை) இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
”இலங்கை, அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையைக் கடைபிடித்துவந்தாலும், அயல்நாடு என்ற வகையில் இந்தியாவுக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் வழங்கி வருகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிதாக அரியணையேறும் அரச தலைவர்கள் தமது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்வது வழமை. ஆட்சிகள் மாறினாலும் வெளிவிவகாரக் கொள்கையென்பது முழு அளவில் பெரும்பாலான நாடுகளில் மாறாது. அந்தவகையிலேயே தனது முதல் விஜயம் பற்றிய ஜனாதிபதி அநுரவின் தேர்வும் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 15.12.2024 (ஞாயிற்றுக் கிழமை) முதல் 17.12.2024 (செவ்வாய்க்கிழமை) வரை இந்தியாவில் தங்கியிருந்து பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதோடு, இந்திய அரசாங்கத்தின் பல அமைச்சர்களுடனும் ஜனாதிபதி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.
அத்துடன் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலீட்டு மற்றும் வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்குடன் டில்லியில் நடைபெறும் வர்த்தக நிகழ்வொன்றிலும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொள்ளவுள்ளார்.
இந்து சமுத்திர பிராந்தியத்தில் (IOR) கடல் மார்க்கமாக இந்தியாவின் மிகவும் நெருங்கிய அயலுறவாக உள்ள இலங்கையானது, இந்தியப் பிரதமரின் சாகர் நோக்கு ( பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பும் செழுமையும்) மற்றும் இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையில் முக்கிய இடத்தினைக் கொண்டிருப்பதாக, இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் வெளிவிவகார மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரும் இணைந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.