குளியாபிட்டிய பிரதேசத்தில் 31 வயது இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கு உதவியமை மற்றும் குற்றத்தை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18 வயதுடைய வஸ்ஸாவுல்ல, இலுக்கின்ன, பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இளைஞன், கடந்த 22ஆம் திகதி தனது காதலியைப் பார்ப்பதற்காக குளியாப்பிட்டிய வஸ்ஸாவுல்ல பகுதிக்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார்.
அந்த பகுதியை சேர்ந்த சிங்கிதி என்பவரின் 18 வயதான மகள் 2 மாத கர்ப்பமாக இருந்தார். காதலனான 31 வயது இளைஞனே கர்ப்பத்துக்கு காரணமென குறிப்பிட்டு, மகளை திருமணம் செய்யுமாறு குறிப்பிடவே சிங்கிதி அழைத்திருந்தார்.
எனினும், அந்த யுவதி பலருடன் பழகுவதாகவும், கர்ப்பத்துக்கு காரணம் தான் அல்லவென மறுத்த இளைஞன், யுவதியை திருமணம் செய்ய மறுத்தார்.
திருமணம் செய்யுமாறும், இருவரையும் வெளிநாடு அனுப்புவதாக யுவதியின் தந்தை வற்புறுத்தினார். இளைஞன் மறுக்கவே, அவரை கடத்திச் சென்று, அடித்துக் கொன்றனர்.
பின்னர் காணாமல் போன இளைஞனின் சடலம் சிலாபம் – மாதம்பே பிரதேசத்தில் மீட்கப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில், குளியாப்பிட்டிய வஸ்ஸாவுல்ல பகுதியைச் சேர்ந்த காதலியின் தந்தையான ‘சிங்கிதி’ என அழைக்கப்படும் சுஜித் பெர்னாண்டோ மற்றும் அவரது மனைவு டிலானி ரசிகா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.