மட்டக்களப்பு வாகரை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்ட நினைவு தூபிகள் நேற்று இரவு (24) இனம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக மாவீரர்களின் உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் கார்த்திகை 27 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள மாவீரர் நினைவேந்தல் நிகழ்வினை முன்னிட்டு மாவடடத்தின் பல்வேறு இடங்களில் மாவீரர் துயிலும் இல்லங்களில் துப்பரவு நடவடிக்கைககள் மற்றும் ஆயத்த நடவடிக்கைகள் மாவீரர்களின் உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறான நிலையில் நேற்று இரவு இனம் தெரியாத நபர்கள் கண்டலடி வாகரை துயிலும் இல்ல வளாகத்திற்குள் நுழைந்து அங்கு ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் நினைவு தூபிகள்,வேலிகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட சிகப்பு,மஞ்சள் கொடிகள் போன்றவற்றை சேதப்படுத்தி சென்றுள்ளதாக கவலை தெரிவித்தனர்.
அண்மையில் கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்ட பொதுச் சுடர் ஏற்றும் நினைவுத் தூபியானது தங்களது வனப் பகுதிக்குள் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதனை அகற்றக்கோரி வன இலகா திணைக்களத்தினர் வாழைச்சேனை நீதி மன்றில் மேற்கொண்ட தடை உத்தரவின் பேரில் நீதி மன்ற அனுமதியுடன் அது அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-க.ருத்திரன்-