சவூதியின் ரியாத் நகருக்கு பணிப்பெண்ணாக சென்ற பெண் ஒருவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக கடந்த 17ஆம் திகதி கிராமசேவகர் ஊடாக குடும்பத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
ஹொரணை, மதுரவல, அங்குருவத்தோட்டையில் வசிக்கும் 32 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான ஹிருஷிகா சண்டமாலி என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்த பெண் வெளிநாட்டு வேலைக்காக சவூதி அரேபியா சென்றிருந்த வேளையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் இறந்துவிட்டதாக அவரது உறவினர்களுக்கு கடந்த 17ஆம் திகதி கிராமசேவகர் தெரிவித்தார்.
குடும்ப வறுமை காரணமாக மருதானையில் உள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் சட்டப்பூர்வமாக பதிவு செய்துவிட்டு 6.2.2021 அன்று வெளிநாட்டு வேலைக்காக சவூதி அரேபியா சென்றுள்ளார்.
சுமார் ஒரு வருடம் ஏழு மாதங்களாக ரியாத்தில் உள்ள ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வரும் இவர், கடந்த ஜனவரி 18ஆம் திகதி முதல் வீட்டிற்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தவில்லை.
முன்னரும் சில சமயங்களில் அவர் இவ்வாறு நீண்டகாலம் தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தாமல் இருந்ததால், இம்முறையும் குடும்பத்தினர் சந்தேகமடையவில்லை.
நீண்டகாலமாக தொலைபேசி அழைப்பு கிடைக்காததால், தமது பகுதி கிராமசேவகரை தொடர்பு கொண்டு தகவல் வழங்கியுள்ளனர். வெளிவிவகார அமைச்சின் தொலைபேசி இலக்கத்தை கொடுத்து அதுபற்றி விசாரிக்குமாறு கிராமசேவகர் கூறியுள்ளார்.
பெண்ணின் கணவர் மறுநாள் தொலைபேசி எண்ணுக்கு அழைத்தபோது, இது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடம் விசாரிக்குமாறும் கூறியுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்iத தொடர்பு கொண்ட பின்னர், அந்தப் பெண் 3 மாதங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார் என்ற செய்தி 2 நாட்களுக்கு முன்னர் அவரது அவர்களுக்கும் கிடைத்துள்ளது.
பின்னர், மனைவியை வெளிநாடு அனுப்பிய மருதானையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் கணவர் பேசிய போது, அவர்களும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், இந்த சம்பவத்தை ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என்றும் தெரிவித்தனர்.
பின்னர் உயிரிழந்த பெண்ணின் கணவர் நேற்று (19) வெளிவிவகார அமைச்சுக்கு சென்றதாகவும், மனைவியின் கடவுச்சீட்டிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.