தமிழர் தாயகம் தழுவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள கதவடைப்பு போராட்டத்திற்கு யாழ்ப்பாண வணிகர் கழகம் முழுமையான ஆதரவை அறிவித்துள்ளது.
இன்று வணிகர் கழகத்தில் தமிழ் அரசியல் கட்சிகளுடன் நடந்த சந்திப்பில், வணிகர் கழகத்தினர் தமது முழுமையான ஆதரவை அறிவித்தனர்.
வடக்கு கிழக்கில் தமிழர் தாயக பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நில, மத, தொல்லியல் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், தமிழ் மக்களின் சுயாட்சியை வலியுறுத்தியும், பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த கதவடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கதவடைப்பு போராட்டத்திற்கு வடக்கு கிழக்கிலுள்ள பிரதான நகரங்களின் வர்த்தகர் சங்கங்கள், தனியார் போக்குவரத்து சங்கங்கள், முச்சக்கர வண்டி சங்கங்கள், சிகையலங்கார சங்கம், மீனவர் அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்த வகையில், இன்று மாலை யாழ் வணிகர் கழகத்தில், அதன் பிரதிநிதிகளுக்கும், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பு நடைபெற்றது. வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரம் உள்ளிட்ட பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் தரப்பில் பா.கஜதீபன் உள்ளிட்டவர்கள் கட்சிகள் சார்பில் கலந்து கொண்டனர்.
25ஆம் திகதி யாழ் வணிகர் கழகம் கதவடைப்பு போராட்டத்திற்கு முழுமையான ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.
