வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பணம் இதுவரை கிடைக்கப்பெறாததால், எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூல வாக்குச் சீட்டுகளை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க முடியாது என அரச அச்சக அலுவலகத்தின் பிரதம அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
வாக்குச் சீட்டு அச்சிடும் பணிக்கு பணம் செலுத்தாததால், பணிகளை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வாக்குச்சீட்டு தயாரித்தல் மற்றும் பெறுபேறு ஆவணங்களை தயாரித்தல் என்பனவற்றிற்காக செலுத்தப்பட வேண்டிய 152 மில்லியன் ரூபாவும் ஊழியர் உழைப்புக்காக செலுத்த வேண்டிய 52 மில்லியன் ரூபாவும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என அச்சகத்தின் தலைவர் தெரிவித்தார்.
இதுவரை நிறைவடைந்த பணிகளுக்காக திறைசேரி 40 மில்லியன் ரூபாவையே வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பணம் கிடைத்தால் வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு சுமார் ஒரு மாத காலம் ஆகும் எனவும் கங்கானி லியனகே குறிப்பிட்டுள்ளார்.
அச்சகத்தின் பாதுகாப்புக்கு சுமார் 5 நாட்கள் ஆகும் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் செலவுக்கு பணம் வழங்க நிதியமைச்சின் செயலாளர் ஒப்புதல் அளித்தால் போதாது என நிதியமைச்சின் செயலாளர் தேர்தல் ஆணைக்குழு தலைவருக்கு எழுத்துப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளார்.
அதற்கு நிதியமைச்சரின் ஒப்புதலும் தேவை என தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் செயலாளர் குறிப்பிட்டிருந்தார்.
தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்கு பணம் வெளியிடுவதற்கு தனது அனுமதி மட்டும் போதாது எனவும் நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடவடிக்கைகளுக்காக 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகம் கடந்த 8ஆம் திகதி நிதியமைச்சிற்கு அறிவித்திருந்தது.
இந்த அறிவித்தல் தொடர்பில் நிதியமைச்சிடம் இருந்து எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை என அரசாங்க செய்தியாளர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
எனவே, வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு இன்னும் முடியவில்லை எனவும், அச்சிடும் பணியை ஆரம்பிப்பதற்கு குறைந்தது 200 மில்லியன் ரூபாவை அரசாங்க அச்சகத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கங்கானி லியனகே குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க அச்சகத்திற்கு அடுத்த வாரத்தில் தொகை கிடைத்தாலும் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூல வாக்குச் சீட்டுகளை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க முடியாது என அச்சகத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போதைய சூழ்நிலையில் மீண்டும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் திகதி தொடர்பில் நிச்சயமற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூல வாக்குச் சீட்டுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்காவிட்டால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால்மூல வாக்குச் சீட்டுகளை மார்ச் 28ஆம் திகதி முதல் ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்படும்.