விடுதலைப் புலிகளின் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்து, தமிழ் தேசியத்தை வீழ்ச்சியடைய வைத்தோம் என்ற வரலாற்று தவறை இலங்கை தமிழ் அரசு கட்சி மேற்கொள்ளக்கூடாது. இன்றைய கூட்டத்திற்கு வந்துள்ளவர்கள் அந்த வரலாற்று கரும்புள்ளியை ஏற்படுத்தாதீர்கள் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா சுட்டிக்காட்டினார்.
1970களில் தமிழ் மக்களின் ஒற்றுமை எவ்வாறு ஏற்படுத்தப்பட்டது, அதை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்புணர்வு அரசியல்வாதிகளிற்கு இருக்க வேண்டிய அவசியம் பற்றி இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா சுட்டிக்காட்டினார்.
தமிழ் அரசு கட்சி பிரிந்து போட்டியிடும் முடிவு ஒரு வரலாற்று தவறாக அமையும் என வவுனியா நகரசபை உறுப்பினர் சேனாதிராசா சுட்டிக்காட்டினார்.
எனினும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழுவில் இருந்த ஏனைய உறுப்பினர்கள் அனைவரும், அதை ஏற்கவில்லை. இனநலனின் அடிப்படையில் அல்லாமல் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பின் அடிப்படையில் சிந்தித்து, கூட்டமைப்பை பிரிக்கும் தீர்மானத்தை மேற்கொண்டனர்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் நேற்று (7) மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியிலுள்ள இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் போது, இலங்கை தமிழ் அரசு கட்சி பிரிந்து சென்று உள்ளூராட்சிசபை தேர்தலில் போட்டியிட வேண்டுமென்ற வாதம் மெதுமெதுவாக தீவிரப்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்தவர்கள் சிலர் பேச முடியாதளவு தீவிரமாக முன்வைக்கப்பட்டது.
தனித்து சபைகளை அமைக்க முடியாமல் போனதால் சிரமப்பட்டோம் என மட்டக்களப்பு பெண் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் சோகக்கதையை ஆரம்பித்து வைத்தார். அதையடுத்து, அனேகர் இந்த விதமான சோகக்கதைகளை பேசி கூட்டத்தை சென்டிமென்டால் மூழ்கடித்தனர்.
ரெலோவினால் தாம் பாதிக்கப்பட்டதாக அங்கு பேசியவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக மட்டக்களப்பில் கோவிந்தன் கருணாகரம் மீது பலர் குற்றம்சாட்டினர். மட்டக்களப்பு மாநகர முதல்வரும் சோகக்கதை சொன்னார். ரெலோ உறுப்பினர்களால் தானும் தீர்மானம் எடுக்க முடியாமல் தவிப்பதாக சொன்னார். (எனினும், பல கட்சி அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகளின் சபையில் பலவித கருத்து இருக்கத்தானே செய்யும் என்ற அடிப்படையை அங்கு யாரும் புரியவைக்கவில்லை).
அந்த கூட்டத்திற்கு சென்ற சிலருக்கு, அது அரங்கேற்றப்பட்ட ஒரு “காவியமா?“ என்ற சந்தேகமும் இருக்கத்தான் செய்கிறது.
எனினும், தலைவர் மாவை சேனாதிராசா அசராமல், அவர்களிற்கு அரசியலை புரியவைக்க முயன்றபடியிருந்தார்.
தமிழ் மக்களின் ஒற்றுமையின் அவசியம், போராட்ட வரலாறு, பிரிந்து தேர்தலில் போட்டியிட கோருவதன் பின்னால் உள்ள ஆசன ஆசை போன்றவற்றை சுட்டிக்காட்டினார்.
உள்ளூராட்சி தேர்தல் நடந்தால் ரணில் தரப்பும் பின்னடைவை சந்திக்கும், தேர்தல் சில வேளை ஒத்திவைக்கப்படலாம். என்றாலும், ஒத்திவைக்கப்படலாம் என நாம் இருந்தால், சில வேளைகளில் வேட்புமனு தாக்கல் செய்யும் காலம் முடிந்து விடும். அதனால் துரிதமாக செயற்பட வேண்டுமென்றார்.
சட்டத்தரணி கே.வி.தவராசா கருத்து தெரிவித்த போது, “தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு நாம் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். தற்போது நடப்பது ஒரு உள்ளூராட்சி தேர்தல். அது நடக்குமா என்பது கூட தெரியாது. நாட்டு பொருளாதார நெருக்கடியில் பணம் அச்சிட்டுத்தான் தேர்தலை நடத்த வேண்டிய சூழல் உள்ளது. தேர்தலை வலியுறுத்துவதில் உள்ள அபாயம் இது.
இந்த தேர்தல் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை விவகாரத்தில் யாருக்கும் செய்தி சொல்லும் தேர்தல் அல்ல. இந்த தேர்தலில் நாம் பிரிந்து போட்டியிட்டால், ஏனைய தரப்புக்கள் அனைத்தும் ஓரணியில் போட்டியிடுவார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரண்டு பங்காளிக்கட்சிகள், முன்னர் அதிலிருந்து வெளியேறியவர்கள் என பெரிய கூட்டணியாக அமையும். அப்படியொரு கூட்டணி அமைந்தால், அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில போட்டியிடுவார்கள். அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரில் போட்டியிடுவதை சட்டரீதியாக தடுக்க முடியாது. ஏனெனில் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்ட கட்சியல்ல. அவர்கள் கூட்டமைப்பாக போட்டியிடுவதை மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடும்.
அப்படியொரு நிலைமை வந்தால், இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து விடும். நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பு என உரிமை கோர முடியாமல் போகும்.
2002 இல் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கட்சி இது. அவர்கள் கட்சியை உருவாக்கிய நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை. அது நிறைவேற முன்னரே கூட்டமைப்பை உடைத்தோம் என்ற வரலாற்று கரும்புள்ளி இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு வரக்கூடாது. அந்த கரும்புள்ளியை இன்றைய கூட்டத்திற்கு வந்தவர்கள் ஏற்படுத்தாதீர்கள்.
நான் கட்சியில் எந்த பொறுப்பிற்கும் ஆசைப்பட்டதில்லை. தேர்தலிற்கும் ஆசைப்பட்டதில்லை. ஆனால், தமிழ் தேசியம் என்ற அடிப்படையில் செயற்பட்டு, அதற்காக கட்சிக்காக உழைத்து வருகிறேன். அந்த தமிழ் தேசியத்தை வீழ்ச்சியடைய வைக்காதீர்கள்“ என்றார்.
இதை தொடர்ந்து வாதப்பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருந்த போது, எம்.ஏ.சுமந்திரன் எழுந்து- “சரி… அப்படியானால் நாம் இப்படியொரு தீர்மானம் எடுத்தால் என்ன?. தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரியத் தேவையில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே இருக்கும் போது, மூன்று கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டால் என்ன?“ என்றார். (இதன்போது கூட்டத்தில் மெல்லிய சிரிப்பு காணப்பட்டது)
இதை தொடர்ந்து சட்டத்தரணிகள் கே.வி.தவராசா, எம்.ஏ.சுமந்திரனிற்கு இடையில் தர்க்கம் ஏற்பட்டது.
சுமந்திரனின் மேற்படி யோசனையை கடுமையாக எதிர்த்த கே.வி.தவராசா, “இங்குள்ளவர்களை என்ன சின்னப்பிள்ளையென நினைத்தீர்களா?“ என காட்டமாக கேட்டார்.
இந்த வாதப்பிரதிவாதங்களின் போது, தமிழ் அரசு கட்சியின் பிரிந்து செல்லும் விவகாரத்தை ஊடகங்கள் செய்தியாக்கும் விதத்தினால் நெருக்கடிக்குள்ளாவதாக தமிழ் அரசு கட்சியினர் தெரிவித்தனர்.
இதையடுத்தே, நேற்று மாலையில் எம்.ஏ.சுமந்திரன் அதை நாசூக்காக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த முடிவு எடுக்கப்பட்டதில் கட்சி தலைவரும், தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழுவில் அங்கம் வகிக்கும் நீண்ட போராட்ட வரலாற்றை கொண்ட ஒரே நபருமான மாவை சோதிராசாவிற்கு உடன்பாடு இருக்கவில்லையென ஊகிக்கப்படுகிறது. இதனால்தான், கூட்டத்தின் பின்னரான செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொள்ளவில்லை. எம்.ஏ.சுமந்திரன் மட்டும் கருத்து தெரிவித்தார்.
நேற்றைய கூட்டத்தில் மதிய உணவாக சோறும், கோழியிறைச்சி கறியும், மீன் பொறியலும், பருப்பும், சொதியும் வழங்கப்பட்டது.