வடக்கு மாகாண தொற்று நோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற முறைகேடுகள் தாபன
விதிக்கோவையின் முதலாவது அட்டவணையின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக
ஆரம்ப புலன் விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது
கிளிநொச்சியில் உள்ள வடமாகாண தொற்றுநோய் வைத்தியசாலையோடு தொடர்புபட்ட
முறைகேடுகளை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஆரம்ப புலன் விசாரணைக் குழுவானது
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணினையில் கடமையாற்றும்
இரு அரச அதிகாரிகள் மற்றும் மூன்று அரச அலுவலர்கள் தாபன விதிக்கோவையின்
XLVIIIம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான அரச அலுவலர்களால்
புரியக்கூடிய குற்றங்கள் பற்றிய முதலாவது அட்டவணை மற்றும் இரண்டாவது
அட்டவணை ஆகியவற்றின் கீழ் வரும் குற்றங்களைப் புரிந்துள்ளதாக
கண்டறிந்துள்ளது.
இதன் அடிப்படையில் உரிய ஒழுக்காற்று அதிகாரிகளுக்கு மாதிரிக்
குற்றப்பத்திரங்களும் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரினால்
அனுப்பப்பட்டுள்ளன.
அதேவேளை அதே அத்தியாயத்தின் 31வது பிரிவானது அரச அலுவலர் ஒருவர்
31.1.1தொடக்கம் 31.1.15வது உபபிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களில் ஒன்றோ அல்லது பலவற்றையோ அல்லது அனைத்தையுமோ புரிந்திருப்பதற்கான ஆதாரம் ஆரம்பப் புலன் விசாரணைகளில் கண்டறியப்பட்டால் அவர் ஒழுக்காற்று அதிகாரியால், அல்லது ஒழுக்காற்று அதிகாரத்தினைக் கொண்டிராத குறித்த அமைச்சின் செயலாளர் அல்லது திணைக்களத் தலைவரால் தழுவனுமதியுடன் சேவை இடைநிறுத்தம் செய்யப்படல் வேண்டும் எனக் குறிப்பிடுகிறது.
இருப்பினும் ஆரம்பப் புலன்விசாரணைக் குழுவினால் 31.1.7, 31.1.9, மற்றும்
31.1.15ஆகிய உபபிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளனவும் முதலாவது
அட்டவணையின் கீழ்வருவனவுமான பாரதூரமான குற்றங்களைப் புரிந்துள்ளார் என
இனம்காணப்பட்ட அதிகாரி ஒருவர் இதுவரை சேவை இடைநிறுத்தம் செய்யப்படவில்லை.
அவர் குற்றம் புரிந்ததாக கண்டறியப்பட்ட கிளிநொச்சி பிராந்திய சுகாதார
சேவைகள் பணிமனையில் இருந்து தற்காலிகமாகவேனும் இடமாற்றமும்
செய்யப்படவில்லை.
இது பொதுமக்கள் மத்தியில் விசனத்தினையும் வடமாகாண தொற்றுநோய்
வைத்தியசாலையில் இடம்பெற்ற நிதிமோசடிகள் மற்றும் குளறுபடிகளில் வடக்கு
மாகாணத்தின் உயரதிகாரிகளுக்கும் பங்கு உண்டோ என்ற சந்தேகங்களையும்
தோற்றுவித்துள்ளது.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திலிப் லியனகேயுடன் இதுகுறித்து
தொடர்புகொண்டு வினவியபோது “குறிப்பிட்ட சம்பவங்களும் விசாரணைகளும் நான்
கடமை ஏற்பதற்கு முன்னர் இடம்பெற்றவையாகும். அவை குறித்த விபரங்கள் உரிய
ஒழுக்காற்று அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிந்தேன். எனவே
அவர்கள் உரிய நடவடிக்கைகளை காலக்கிரமத்தில் எடுப்பார்கள் என நம்புகிறேன்”
எனத் தெரிவித்தார்.



