போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்திய கடவுச்சீட்டைப் பெற்ற குற்றச்சாட்டில் 43 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவரை குற்றப் பிரிவு பொலிஸார் ஓகஸ்ட் 16ஆம் திகதி கைது செய்தனர்.
கைதானவர் பெண் மத போதகராவார்.
கொழும்பைச் சேர்ந்த மனுவல் மரியா செல்வம் என்ற பெண், அண்ணா நகரில் வசித்து வந்தவர், ஒரு தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரிந்தார். இவர் கடந்த 2016ம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட்டை பெற்றுள்ளார்.
அவரது இலங்கை கடவுச்சீட்டு 2020 இல் காலாவதியானது என பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது அடையாளத்தையும் தேசத்தையும் மறைத்து இந்திய கடவுச்சீட்டைப் பெற்றுள்ளதாக குடிவரவு அலுவலகத்திற்குத் தெரிவித்ததை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
நுங்கம்பாக்கத்தில் உள்ள குடியுரிமை அலுவலகத்தில் விசாரணைக்காக அவர் அழைக்கப்பட்டார், அங்கு அதிகாரிகள் அவரது ஆவணங்களை ஆய்வு செய்ததில், ஆதார ஆவணங்கள் போலியானது என்பதைக் கண்டறிந்தனர்.
குடியுரிமை அதிகாரி நிபின் ஜோசஃப் அளித்த புகாரின் அடிப்படையில் மோசடி, பொய்யான ஆவணங்களை புனைதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக பெண் மத போதகர் மானுவேல் மரியா செல்வம் என்பவர் பாதிரியார்களின் மகன்களை குறிவைத்து வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இலட்சக் கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்ட நிலையில் விசாரணை நடத்தி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.