கட்டார் அறக்கட்டளை (Qatar Charity) நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளதாக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கட்டாருக்கு சென்றுள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்தார்.
“கத்தார் தொண்டு நிறுவன அதிகாரிகளை நேற்று சந்தித்தேன். 2019 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட நிதி தடையை நீக்குவதற்கான தீர்மானத்தை சட்டமா அதிபருக்கு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் அறக்கட்டளையின் பணிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது” என இலங்கை எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர கட்டாரில் இருந்து ட்வீட் செய்துள்ளார்.
கட்டார் அறக்கட்டளை நிறுவனம் கட்டார் அரசாங்கத்தின் முக்கிய தொண்டு நிறுவனமாகும். இது இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தைக் கொண்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ‘கட்டார் அறக்கட்டளை’ ஒரு பயங்கரவாத நிறுவனம் என்று இலங்கை பாதுகாப்புதுறை தெரிவித்தது.
கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான வழக்கின் போது, “கட்டார் அறக்கட்டளை” ஒரு பயங்கரவாத நிதி அமைப்பு என்றும், பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது தொடர்பான குற்றங்கள் தங்களால் விசாரிக்கப்படுவதாகவும் சிஐடி நீதிமன்றத்தில் தெரிவித்தது.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் வழக்கறிஞர்கள், கட்டார் அறக்கட்டளையை பயங்கரவாத அமைப்பாக பெயரிடுவது ஹிஸ்புல்லாவை 2019 ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று கூறியுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 2019 ஆம் ஆண்டு கொழும்பில் கட்டார் அறக்கட்டளை நிறுவன அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளித்ததாக பொதுபல சேனா குற்றஞ்சாட்டியது.
தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கி திணறும் இலங்கை, கட்டார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து எரிபொருள் கடன் கோரும் பேச்சை ஆரம்பித்துள்ளனர். இந்த நிலைமையில் கோட்டா அரசு, தனது முடிவுகளையே மாற்ற வேண்டிய நிலைமைக்கு உள்ளாகியுள்ளது.



