மரணதண்டனை விதிக்கப்படும் போது பின்பற்றப்படும் மரபுவழிகளை பின்பற்றாமல், திறந்த நீதிமன்றமொன்றில் நீதிபதியொருவர் மரண தண்டனை தீர்ப்பளித்துள்ளார்.
மரணதண்டனை தீர்ப்பளிக்கப்படும் போது, மூடிய மன்றத்திற்குள் விளக்கை அணைத்து, தீர்ப்பை எழுதிய பேனாவை உடைத்தல் போன்ற மரபுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனினும், தங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.ஏ.எஸ்.சபுவித, இந்த மரபுகளை பின்பற்றப் போவதில்லையென அறிவித்து, திறந்த நீதிமன்றத்தில் ஒரு பிரதிவாதிக்கு மரண தண்டனை விதித்தார்.
வலஸ்முல்லவைச் சேர்ந்த லால் ரஞ்சன் என்பவர் 16.16.2006 அன்று அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றில் ஹேரவெல பிரதேசத்தில் பெண்ணொருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்.
மரண தண்டனையை அறிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி கூறியதாவது:
உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்கும் போது திறந்த நீதிமன்றத்தில் விளக்குகளை அணைத்து, யன்னல்களை அடைத்து, நான் பெஞ்சில் இருந்து எழுந்து நின்று தீர்ப்பில் கையெழுத்திட்ட பேனாவை உடைப்பேன். ஆனால் இன்று நான் திறந்த நீதிமன்றத்தில் அந்த பாரம்பரிய செயல்களை செய்ய மாட்டேன்’ என குறிப்பிட்டு, இதற்கான காரணங்களையும் தெரிவித்துள்ளார்.
நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொலை வழக்கில் மரணதண்டனை உறுதி செய்யப்பட்ட பின்னரும் அவர்களிற்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை, உயர்நீதிமன்றத்தால் தண்டனை உறுதி செய்யப்பட்டவர்களும் சட்ட கட்டமைப்பிற்குள் விடுவிக்கப்படும் சந்தர்ப்பங்களில், ஒரு சாதாரண நபருக்கு இந்த முறையில் மரண தண்டனை விதிப்பது பொருத்தமற்றது என குறிப்பிட்டார்.
அதன்படி, மற்ற வழக்குகளின் தீர்ப்புகள் கூறப்படும் விதத்தில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை வாசித்து, மரண தண்டனை விதிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி மேலும் தெரிவித்தார்.
மரணதண்டனை குற்றவாளி துமிந்த சில்வா அண்மையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலையானது நாட்டில் பரவலான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.