யாழில் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்
மாவட்ட செயலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழில் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக உடுவில் பிரதேச செயலர் பிரிவில் இரண்டு கிராம அலுவலர் பிரிவுகள் ஜே189, 190ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் ஒரு சில பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் அரசடிப்பகுதி தனிமைப் படுத்தப் பட்டுள்ளது. ஏற்கனவே அதிக அளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டப்பட்டிருந்த தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் இரண்டு கிராம சேவகர் பிரிவும் அதேபோல காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் ஒரு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு அரசினால் வழங்கப்படும் பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்றிரவு கிடைத்த பிசிஆர் பரிசோதனைகளில் முடிவுகளின்படி 59 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
அந்த வகையில் கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் யாழ் மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3508 ஆக அதிகரித்திருக்கின்றது. அதே நேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 48 கொரோனா உயிரிழப்புகள் இன்றுவரை பதிவாகியுள்ளன.
மேலும் 2908 குடும்பங்களைச் சேர்ந்த 7778 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
அதனைவிட வறிய குடும்பங்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு சமுர்த்தி பெறுபவர்கள், மாற்றுத்திறனாளி கொடுப்பனவு பெறுவோர், வயது முதிர்ந்தோர் கொடுப்பனவு, சிறுநீரக கொடுப்பனவு பெறுவோருக்கு முதற் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த அடிப்படையில் சுமார் 59 ஆயிரம் குடும்பங்கள் இன்று வரை 5000 ரூபா கொடுப்பனவினை பெற்றிருக்கின்றார்கள்.
ஏனைய பகுதியினருக்கு நிதி கிடைத்தவுடன் அதனை வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதற்குரிய நிதி இன்னும் கிடைக்கப் பெறவில்லை. எனவே பொதுமக்கள் பொறுமையாக இருந்து அந்த நிதியினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும் தடுப்பூசி வழங்கலை பொறுத்தவரை முதற் கட்டமாக வழங்கப்பட்ட ஐம்பதாயிரம் தடுப்பூசிகளின் 49 ஆயிரத்து 439 தடுப்பூசிகள் முழுமையாக வழங்கப்பட்டு முடிவுறுத்தப் படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசிகள் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசி இன்றைய தினம் காலையில் இருந்து 4 வைத்தியசாலைகளில் வழங்கப்பட்டு வருகின்றது.
தற்போது பயணத்தடைஅமுலில் உள்ள நிலையில் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்திருக்கிறது. சில வீதிகளிலே பொதுமக்கள் அதிக அளவில் நடமாடுவதாக. இதனை நாங்கள் 24 மணி நேரமும் போலீசாரை வைத்து கண்காணிக்க முடியாது.
எனவே பொதுமக்கள் தாங்களாகவே அந்த விடயத்தை உணர்ந்து அநாவசிய நடமாட்டங்களை கட்டுப்படுத்தி அநாவசியமாக வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்த்து இந்த நிலைமையினை அனுசரித்து செயற்பட வேண்டும். பொதுமக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகாமல் மேலும் தொற்றை ஏற்படுத்தாது பயண கட்டுப்பாட்டை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
தற்பொழுது பொதுமக்கள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் நடமாடும் விற்பனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் மிக மிக அத்தியாவசியமான சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகின்றது. அதாவது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அந்த அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதை துஷ்பிரயோகம் செய்யாது நிலைமை அனுசரித்து செயற்பட வேண்டுமென்றார்.