விலை உயர்ந்த `லெஹங்கா’வை மணமகள் அணியாததால் தகராறு ஏற்பட்டு திருமணம் நின்றுவிட்டது. இதைத் தொடர்ந்து சம்பந்திகள் கத்தியை உருவி சண்டை போட்ட சம்பவம் ஹரியானாவின் பானிப்பட் நகரில் நடந்துள்ளது.
ஹரியானாவின் பானிப்பட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த பிப்ரவரி 23-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. மணமகன், பஞ்சாபின் அமிர்தசரஸைச் சேர்ந்தவர். இதையடுத்து மணமகன் குடும்பத்தார் பிப்ரவரி 23-ம் தேதி பானிப்பட்டுக்கு வந்து சேர்ந்தனர்.
திருமணச் சடங்கின்போது மணமகள் அணிந்து வந்த `லெஹங்கா’வை பார்த்ததும், மணமகன் குடும்பத்தார் சண்டை போடத் தொடங்கினர். இந்த `லெஹங்கா’வின் விலை ரூ.20 ஆயிரம் மட்டுமே. ஆனால் நாங்கள் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள `லெஹங்கா’வை வாங்குமாறு கூறியிருந்தோமே. அதை ஏன் மணமகள் அணியவில்லை என்று சண்டை போட்டனர். இதையடுத்து மணமகளின் குடும்பத்தார், அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் வாய்த்தகராறு முற்று கைகலப்பில் முடிந்தது.
இந்நிலையில், மணமகனின் உறவினர் ஒருவர் பட்டாக்கத்தியுடன் வந்து தாக்கத் தொடங்கினார். பதிலுக்கு மணமகள் குடும்பத்தாரும் கத்தியை எடுத்து சண்டை போட்டனர். இதனால் திருமண மண்டபத்தில் கூச்சலும், குழப்பமும் நிலவியது. திருமணத்துக்கு வந்த உறவினர்கள் அனைவரும் சிதறி ஓடினர். இதனால் திருமண மண்டபமே போர்க்களம் போல காணப்பட்டது. ஆனால் `லெஹங்கா’ பிரச்சினை ஓயவில்லை. கோபமடைந்த மணமகன் குடும்பத்தார், திருமணத்தை நிறுத்துவதாகக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
மணமகள் விலை உயர்ந்த `லெஹங்கா’ அணியாமல் இருந்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.