அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வாள் ஒன்றினை மறைத்து வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்மாந்துறை பெருங்குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, சென்னல்கிராமம் 02 பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர், இரண்டரை அடி நீளமான வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் சட்டவிரோதமாக வாளை உடைமையில் வைத்திருந்ததற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து மீட்கப்பட்ட வாள் சான்றுப் பொருளாக கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, சந்தேக நபரை சான்றுப் பொருள்களுடன் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



