கண்டி நகரை மையமாகக் கொண்டு 168 அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நகர அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பித்துள்ளது. இந்தப் பாரிய திட்டம் 2035ம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் குமுது லால் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, கண்டி மாநகர சபை உட்பட உள்ளூராட்சி நிறுவனங்கள் 15ஐ மையமாகக் கொண்டு, 600 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார். இந்த 168 திட்டங்களில் 13 திட்டங்கள் கண்டி நகரத்திற்குள் உடனடியாக செயல்படுத்தப்படவுள்ளன.
“கந்த உடரட தேஜாத்வித அகநகரய” எனும் கண்டி நகரத்தின் சமய, கலாச்சார, வரலாற்று மற்றும் உரிமை முக்கியத்துவங்களை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அபிவிருத்தித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்நோக்கு போக்குவரத்து வாகனத் தரிப்பிடங்கள், முக்கிய வீதி அபிவிருத்திகள், சுரங்கப்பாதைகள், மற்றும் பொது போக்குவரத்து வசதிகள் மேம்பாடு போன்றவை அடங்கும்.
முக்கியமாக, ஹிருஸ்ஸகல சந்தியில் இருந்து வில்லியம் கொபல்லாவ மாவத்தை ஊடாக வைத்தியசாலை சந்தி வரையிலான வீதி அபிவிருத்தி, மஹிய்யாவை சுரங்கப்பாதை நிர்மாணம், குடாரத்வத்த வீதி மற்றும் வில்லியம் கொபல்லாவ மாவத்தை அபிவிருத்தி, தென்னேகும்புறயிலிருந்து தர்மராஜ வித்தியாலயம் வரை பிரதான வீதி அபிவிருத்தி ஆகியவை முன்னெடுக்கப்படும்.
மேலும், கண்டி நகருக்குள் பொது வாகனத் தரிப்பிடங்களை மேம்படுத்தும் நோக்கில் நுவரவெல மற்றும் சிங்க ரெஜிமேந்து வளாகங்களுக்கு அண்மையில் இரண்டு புதிய பொது போக்குவரத்து வாகனத் தரிப்பிடங்கள்அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பாரிய அபிவிருத்தித் திட்டம், கண்டி நகரின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதோடு, சுற்றுலா மற்றும் வர்த்தக வளர்ச்சிக்குத் துணைபுரியும் வகையில் நவீன நகர்ப்புற மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.