அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் (பெப்ரவரி 13ம் திகதி) வெள்ளை மாளிகையில் இடம்பெற்றது.
இந்த உயர்மட்ட சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள், பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி தொடர்பான முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
அமெரிக்காவிற்கு எதிராக இந்தியா அதிக இறக்குமதி வரிகளை விதிக்கிறது என அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். “உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது. வரியை அதிகமாக விதிப்பதில் அவர்கள் கடுமையாக இருக்கிறார்கள். ஆனால், அதே நேரத்தில், இது வணிகம் செய்வதற்கான அவர்களின் தனித்துவமான அணுகுமுறை,” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது, அமெரிக்காவிடமிருந்து இந்தியா அதிக எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான புதிய ஒப்பந்தத்தையும் டிரம்ப் அறிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறையை குறைக்க இந்த ஒப்பந்தம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்களை நாடு திரும்ப அனுப்பும் திட்டம் தொடர்பிலும் மோதி & டிரம்ப் ஆகியோர் கலந்துரையாடினர். இது தொடர்பாக இந்தியா ஒத்துழைப்பதற்கு தயாராக இருப்பதாக பிரதமர் மோதி தெரிவித்தார்.
அமெரிக்காவின் வர்த்தக கூட்டாளிகள், அமெரிக்காவிற்கு விதிக்கும் வரிகளுக்கு சமமாகவே வரிகளை எதிர்கொள்ள வேண்டும் என டொனால்ட் டிரம்ப் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இரு தலைவர்களும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்த முடிவெடுத்துள்ளனர்.
இந்த சந்திப்பு உலகளாவிய வர்த்தக நிலைமை, வரிவிதிப்பு முறைகள் மற்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.