யாழில் உள்ள தையிட்டி விகாரை உடைக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டும், அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முழுமையான ஆதரவு வழங்குவதாகவும் அந்த கூட்டணியின் முக்கியஸ்தர், பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று (10) வவுனியாவில் ஐனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் பின்னர், ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், தையிட்டி விகாரைக்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு கூட்டணி முழு ஆதரவு வழங்குவதாகவும், இது உண்மையில் உடைக்கப்படவேண்டிய விடயம் எனவும் தெரிவித்தார்.
மேலும், “வடகிழக்கில் பிக்குகள் மற்றும் சில திணைக்களங்கள் தங்கள் கருத்துகளுக்கேற்ப செயல்படும் நிலை காணப்படுகின்றது. எனவே, இந்த விகாரை உடைக்கப்படவேண்டும் என்பது எமது நிலைப்பாடு. அதற்கான ஆதரவை நாங்கள் வழங்குவோம், மக்களுடைய விருப்பமும் அதுவே” எனவும் கூறியிருந்தார்.



