இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வு இன்று (04) திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
நிகழ்வின் முக்கிய அம்சமாக, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அக்மீமன கமகே ரொஷான் பிரியசஞ்சன் அவர்களால் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு, அதன் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்த முப்படை வீரர்களை நினைவு கூறும் வகையில் இரண்டு நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
“தேசிய மறுமலர்ச்சிக்கு தயாராகுவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், நிகழ்வின் ஒரு பகுதியாக மாவட்ட செயலக வளாகத்தில் மரநடுகை நிகழ்வும் நடைபெற்றது.
சர்வ மத தலைவர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், இலங்கையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பல்வேறு இனங்களின் கலாச்சார நிகழ்வுகள் இடம் பெற்றன. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
இதனுடன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

