புத்தசாசன அமைச்சர் திரு. ஹினிதும சுனில் செனவி மற்றும் சட்டவிரோத குருந்தூர்மலை விகாராதிபதி கல்கமுவ சாந்தபோதி நாயக்க தேரருக்கு இடையில் நேற்றைய தினம் (06.01.2025) பேச்சுவார்த்தை ஒன்று நேரில் இடம்பெற்றிருந்தது.
இந்த சந்திப்பின் போது, திரு. ஹினிதும சுனில் செனவி, வட மாகாணத்தில் உள்ள புராதன பௌத்த தளங்களை பாதுகாக்க விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், விரைவில் குருந்தூர்மலை உள்ளிட்ட தளங்களுக்கு நேரில் செல்வதாகவும் கூறியிருந்தார்.
இதேவேளை, கல்கமுவ சாந்தபோதி நாயக்க தேரரின் கட்டுப்பாட்டில், சட்டவிரோதமாக வவுனியாவில் அமைக்கப்பட்ட சபுமல்கஸ்கட விகாரை தொடர்பாக பல முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.
மறுபுறம், கிழக்கு மாகாணத்தில் “பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்குவோம்” எனும் தலைப்பில், சர்ச்சைக்குரிய பாணமுரே திலகவம்ச தேரர் தலைமையில் வரும் 11ம் திகதி முதல் திருகோணமலையில் இது சார்ந்த நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திட்டங்களுக்கு அமைச்சரவை மட்டுமே பாதுகாப்பு வழங்கியுள்ளதோடு, திருகோணமலையின் வெருகல் மற்றும் வட்டவன் கிராமத்தில் புதிய தொல்லியல் நிலையங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை, பலாலி, நயினாதீவு, நெடுந்தீவு, தையிட்டி, வல்லிபுரம், ஊர்காவற்துறை, மற்றும் வலிகாமம் உள்ளிட்ட பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தபட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக நாவற்குழி சிங்கள குடியேற்றம் தவிர்ந்த வேறு குடியேற்றங்கள் எதுவும் நடைபெறாத நிலையில் ஜேவிபி யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி பரந்தளவிலான குடியேற்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த தயாராகின்றது. குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினருக்கு காணிகளை பெற்று கொடுத்து அவர்களின் குடும்பங்களை குடியேற்ற திட்டமிடப்படுவதாக தகவல்களும் வெளியாகியுள்ளன.
தொல்லியல் திணைக்கள ஆலோசகர் எல்லாவல மேதானந்த தேரர், யாழ்ப்பாணத்தில் 17 இடங்களில் சிங்கள மக்கள் வாழ்ந்து வந்ததாக உரிமை கோருவதோடு, சிங்களவர்களால் நிர்மாணிக்கப்பட்ட தளங்கள் என்று சில பகுதிகளை அடையாளப்படுத்தியுள்ளார்.
இந்த நடவடிக்கைகள், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களிடையே கவலைகளையும், இன அதிகார ஆக்கிரமிப்பு என்ற குற்றச்சாட்டுகளையும் ஏற்படுத்தியுள்ளன.
அரசின் இந்த செயல்பாடுகள் எதிர்காலத்தில் சமூக ஒற்றுமைக்கு சவாலாக மாறுமா? என்ற கேள்வி தற்போது பொது மக்கள் மத்தியில் நிலைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.