சமஸ்டியை வழங்க முடியாது என்று சொல்வதற்கு விஜித ஹேரத்துக்கோ தேசிய மக்கள் சக்திக்கோ அதிகாரம் கிடையாது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். கட்சி வேறு. அரசாங்கமும் அரசாட்சியும் வேறு என்பதை விஜித ஹேரத் புரிந்து கொள்ள வேண்டும். மாற்றத்தை உருவாக்குகிறோம் என்று சொல்லிக் கொண்டு,
மாற்றமே இல்லாமல் ஆட்சி நடத்த முடியுமா? அப்படியானால் நீங்கள் உருவாக்க முற்படுகின்ற மாற்றம் என்ன? என்று சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளருமான முருகேசு சந்திரகுமார் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
வடமராட்சி கிழக்கில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கும்போது,
தமிழ் மக்களுக்குச் சமஸ்டியை வழங்க முடியாது என்று விஜித ஹேரத் சொல்வதற்கான துணிச்சலைக் கொடுத்தது தமிழ்த்தேசியத் தரப்பினரேயாகும். அவர்களுடைய குடும்பச் சண்டைகளும் குடுமிச் சண்டைகளுமே தென்னிலங்கைக்கு அதிகார போதையை அளித்துள்ளது. தமிழ் அரசியல் சிதறிப் பலவீனப்பட்டுப் போயிருப்பதற்கான முழுப்பொறுப்பையும் தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்த கட்சிகள் ஏற்க வேண்டும். மக்களை மதிக்காமல் செயற்பட்டதன் விளைவுகளே இன்றைய சீரழிவாகும். இதனை மக்கள்புரிந்து கொள்ள வேண்டும். இப்போது கூட தமது தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு இந்தச் சக்திகள் விரும்பவில்லை. ஆகையால் இன்னும் இன்னும் பலவீனங்களும் பின்னடைவுகளுமே ஏற்படப்போகின்றன. இதற்குத் தமிழ்ச்சமூகம் இடமளிக்கக் கூடாது.
இலங்கை ஒரு பல்லின நாடு. இங்கே தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையக மக்கள் வாழ்கின்றனர். அந்தந்தச் சமூகங்களைப் பிரதிதித்துவம் செய்கின்ற மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்திருக்கின்றனர். எதிர்க்கட்சியாக இரண்டு தடவைகள் பாராளுமன்றத்தில் தமிழ்த்தரப்பு அமர்ந்துள்ளது. இதையெல்லாம் விஜித ஹேரத் அறியாமல், புரிந்து கொள்ள முற்படாமல் பேசுகிறார். நாம் ஐக்கிய மக்கள் சக்தியில் தமிழ்பேசும் சமூகத்தினராகவும் இலங்கைச் சமூகங்களாகவும் ஒன்றிணைந்து நிற்கிறோம். இலங்கையின் ஜனநாயகச் சூழலையும் பன்மைத்துவத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரே தரப்பு நாம்தான். அதனால்தான் எமக்கு ஆதரவு அதிமாக உள்ளது என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பொறுப்பாளர் வேங்கை, தவிசாளர் மனோகரன் எனப் பலரும் உரையாற்றினர். பெருமளவான பொது மக்களும், மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.




