மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறவிருக்கும் ரி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பங்களாதேஷ் அணியில் ரிஷாத் ஹொசைன் என்ற உயரமான ரிஸ்ட் லெக் ஸ்பின்னரை அணியில் சேர்த்துள்ளனர்.
ரிஷாத் ஹொஹுசைனுக்கு வயது 21 தான். இவர் இதுவரை 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், 17 ரி20 சர்வதேசப் போட்டிகளிலும் ஆடியுள்ளார். ரி20 சர்வதேசப் போட்டிகளில் இதுவரை 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக 21 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை எடுத்தது சிறந்த பந்து வீச்சாக உள்ளது. ஆனால் இவரது சிக்கன விகிதம்தான் நம் கவனத்திற்குரியது 7.17 தான் இவரது சிக்கன விகிதம்.
கடைசியில் இறங்கி துடுப்பாட்டத்திலும் காட்டடி சிக்சர்களை அடிக்கக் கூடியவர். ஒருநாள் போட்டிகளில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 48, ஸ்ட்ரைக் ரேட் 245.45. ரி20களில் அதிகபட்ச ஸ்கோர் 53, ஸ்ட்ரைக் ரேட் 135.
பங்களாதேஷ் அணியில் இதுவரை பார்த்தோமானால் லெக் ஸ்பின் பந்துவீச்சாளர் அதிகம் ஆடிப்பார்த்திருக்க மாட்டோம். நாம் இதைப் பற்றி யோசித்திருக்கவும் மாட்டோம். ஏன் பங்களாதேஷ் அணியில் இடது கை ஸ்பின்னர்கள் வரும் அளவுக்கு லெக் ஸ்பின்னர் வருவதில்லை என்ற கேள்வி நமக்கு எழுந்ததில்லை. காரணம் லெக் ஸ்பின்னர்களை சரியாக மதிப்பிடத் தெரியாத கிரிக்கெட் உலகம் அது. ஓவருக்கு 6 ரன்களுக்கும் மேல் கொடுக்கும் லெக் ஸ்பின்னர்களுக்கு அங்கு உள்நாட்டு கிரிக்கெட்டிலேயே இடமிருக்காது என்றுதான் பங்களாதேஷ் கிரிக்கெட் பற்றிய விவரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.
லெக் ஸ்பின் என்றால் ரன் கொடுப்பார்கள் என்ற பிற்போக்குச் சிந்தனை அங்கு நிலவுவதாக பங்களாதேஷ் கிரிக்கெட்டின் உள்கட்டமைப்பு மற்றும் அதன் மனநிலைகளை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
1988 முதல் 2023 ஆம் ஆண்டு வரை பங்களாதேஷ் அணிக்காக இரண்டு உண்மையான லெக்ஸ் ஸ்பின்னர்கள் மட்டுமே விளையாடியுள்ளனர். (துடுப்பாட்ட சகலதுறை வீரரான அலோக் கபாலி, தனது லெக்ஸ்பின் மூலம் பங்களாதேஷின் முதல் டெஸ்ட் ஹட்ரிக் சாதனையை எடுத்தார்.) இதுவரை 2 லெக் ஸ்பின்னர்கள்தான் ரிஷாத் ஹொசைனுக்கு முன்னால் பங்களாதேஷ் அணிக்கு ஆடியுள்ளனர். வஹிதுல் கனி, 1988 இல் ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடியவர். 2014 மற்றும் 2015 க்கு இடையில் பத்து சர்வதேச போட்டிகளில் விளையாடிய ஜுபைர் ஹொசைன்.
லெக்ஸ்பின் மிகவும் இன்றியமையாத ஒரு காலத்தில், குறிப்பாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில், பங்களாதேஷ் அணி எதைத் தவறவிட்டோம் என்பதை கவனிக்காமல் இருந்தனர். கடந்த ஆண்டு, அயர்லாந்துக்கு எதிரான ரி20 போட்டியில் ரிஷாத் ஹொசைன் அறிமுகமானபோது, யாரும் அதைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. அந்த ஆட்டத்தைப் பார்த்தவர்கள், பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்கவுக்கு லெக்ஸ் ஸ்பின்னர்கள் மீதுள்ள காதல்தான் அவரை அறிமுகம் செய்யத் தூண்டியதாகக் கருதுகின்றனர்.
இத்தகைய ஒரு சூழலிலிருந்து ரிஷாத் ஹொசைனை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் uி20 அணியில் தேர்வு செய்துள்ளது என்றால், அவரிடம் அசாதாரணமான திறமைகள் இருக்க வேண்டும்.
யுஎஸ்ஏ அணிக்கு எதிராக இப்போது தொடரை இழந்த பங்களாதேஷ் அணியில் ரிஷாத் ஹொசைன் இருந்தார். 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். ஆனால் இவரது சிக்கன விகிதம் 4.40 என்றால் நம்ப முடிகிறதா?. வெளிநாட்டு மண்ணில் பங்களாதேஷ் பந்துவீச்சாளர் ஒருவரின் சாதனை சிக்கன விகிதமாகும் இது.
பங்களாதேஷில் லெக் ஸ்பின் பற்றி கருத்து கூறும் இப்போதைய யு.எஸ்.ஏ அணியின் பயிற்சியாளரும் முன்னாள் பங்களாதேஷ் பயிற்சியாளரும் அவுஸ்திரேலிய வீரருமான ஸ்டூவர்ட் லா, இப்படிக் கூறுகிறார்: “லெக் ஸ்பின்னர்களை பங்களாதேஷ் கிரிக்கெட் உலகம் நம்புவதில்லை. இடது கை ஸ்பின்னைத்தான் நம்புவார்கள். ஆனால், இந்த ரிஷாத் அட்டகாசமாக வீசுகிறார். அதுவும் ஸ்பின் சுத்தமாக எடுக்காதப் பிட்சில்” என்றார்.
இவர் பெரிய அளவில் பந்துகளைத் திருப்புபவர் அல்ல. மாறாக போதுமான அளவு திருப்பி பேட்டர்களுக்குக் கடினமான நேரத்தை அளிப்பவர். நியூஸிலாந்தில் டூர் மேட்ச் ஒன்றில் 54 பந்துகளில் 87 ரன்களையும் விளாசியுள்ளார் ரிஷாத் ஹுசைன். இதனையடுத்தே பயிற்சியாளர் ஹத்துருசிங்க இவருக்கு ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஆட வாய்ப்பு வழங்கினார். இவர் உயரமாக இருப்பதால் கரெக்டாக யோர்க்கர் லெந்தில் துல்லியமாக வீசி பேட்டர்களுக்கு எந்த ஒரு இடமும் கொடுப்பதில்லை என்கிறார் ஹத்துருசிங்க. ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இலங்கைக்கு எதிராக 8வது டவுனில் இறங்கி 18 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 48 ரன்களை விளாசி வெற்றி பெற வைத்தார்.
எனவே இந்த முறை இந்த இளைஞர் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தால் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் பலர் அடங்கிய இந்த உலகக் கோப்பையில் பங்களாதேஷ் அணியும் ஒரு அடையாளத்தைப் பெற வாய்ப்புள்ளது.