ISIS செயற்பாட்டாளர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு இலங்கை பிரஜைகள் கைது செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் இதற்கு முன்னர் தங்கம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புபட்டவர்கள் என்று குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) புதன்கிழமை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் முகமது நுஸ்ரத் (33), முகமது பாரிஸ் (35), முகமது நஃப்ரான் (27), முகமது ரஸ்தீன் (43) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட கையாள்பவரின் உத்தரவின் பேரில் சந்தேக நபர்கள் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டதாக ஏடிஎஸ் திங்களன்று கூறியது.
புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் ஏடிஎஸ் எஸ்பி சுனில் ஜோஷி, தங்கம் கடத்தியதற்காக மும்பை விமான நிலையத்தில் நுஸ்ரத் இதற்கு முன்பு இரண்டு முறை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இலங்கையில் தாக்குதல் மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.
“அதேபோல், ஃபரிஸ் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக இலங்கை சிறையில் அmடைக்கப்பட்டிருந்தார். ரஸ்தீனும் திருட்டு மற்றும் மூன்று போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். நஃப்ரான் கைது செய்யப்படாத நிலையில், கடந்த காலங்களில் துபாய் மற்றும் இலங்கையில் இருந்து தங்கம் மற்றும் போதைப்பொருட்களை கடத்தி வந்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்“ என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “ஃபாரிஸ் மற்றும் ரஸ்டீன் முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்தனர். நுஷ்ரத் 2022 மற்றும் 2023 க்கு இடையில் கிட்டத்தட்ட 38 முறை இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார் நஃப்ரான் கிட்டத்தட்ட 40 முறை இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார், ஆச்சரியப்படும் விதமாக அவர்கள் அடிக்கடி பயணம் செய்த போதிலும், பெப்ரவரியில் அவர்களின் பாகிஸ்தான் கையாளுநரைத் தொடர்பு கொண்ட பிறகு அவர்கள் இந்தியாவுக்குப் பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும், ”என்று ஜோஷி மேலும் கூறினார்.
அவர்களின் கடந்தகால இந்தியப் பயணங்களின் விவரங்களை விசாரிக்க குழுக்கள் இப்போது அமைக்கப்பட்டுள்ளன.