மலையக குருமார்கள் தற்போதை சூழ்நிலையில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். பொருளாதார ரீதியாகவும் அதேபோல அடிப்படை பிரச்சனைகள் ரீதியாகவும் சொல்லெண்ணா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கான தீர்வொன்றினை மலையக அரசியல் பிரதிநிதிகளும் அரசாங்கமும் வழங்க முன்வர வேண்டுமென அகில இலங்கை ஐக்கிய இந்து குருமார் சங்கத்தின் ஸ்தாபக தலைவர் தற்புருஷ சிவாச்சாரியார் சிவஸ்ரீ ஸ்கந்தராஜா குருக்கள் தெரிவித்துள்ளார்.
இன்று கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் தேவஸ்தானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
மலையகத்தில் காணப்படுகின்ற குருமார்கள் பெரும்பாலும் நிரந்தரமான வீடுகளின்றியே வசித்து வருகின்றனர்.சிலர் வாடகை வீட்டில் குடியிருக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது. ஆனால் வருமானம் குறைந்தளவே காணப்படுகின்றது.
பெரும்பாலும் தோட்டப்புற பகுதிகளில் வாழும் குருமார்கள் ஆலய நிர்வாகத்தால் வழங்கப்படுகின்ற குடில்களிலேயே வசித்து வருகின்றனர். வருமானமும் போதியளவில் இல்லை. எனவே பிற்பட்ட காலங்களில் அக்கோவிலை விட்டு நீங்கும் இடத்து இருக்க இருப்பிமின்றி செல்லும் துர்பாக்கிய நிலை ஏற்படும்.
எனவே தற்போது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற பத்தாயிரம் வீட்டு திட்டத்தில் மலையக குருமார்களையும் உள்வாங்கி வீடுகளை வழங்க வேண்டும். அல்லது வீடு கட்டுவதற்கான ஒரு துண்டு நிலமேனும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார்.
-நீலமேகம் பிரசாந்த்-