இலங்கைக்கு பயணிக்கும் இந்தியர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை இந்திய பணமூலத்திலேயே கொள்முதல் செய்வதற்கு ஏதுவான Rupay எனப்படும் – ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறையை யுபிஐ (UPI) – இரு நாட்டு தலைவர்களும் இணைந்து இன்று மதியம் இணைய வழியாக ஆரம்பித்து வைத்துள்ளனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தலைவர்கள் இணைய வழியாக ஆரம்பித்து வைத்துள்ளனர்.
UPI எனப்படும் இந்திய ஒருங்கிணைந்த கட்டணச் செயல்முறை 2016 ஆம் ஆண்டில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் உடனடி பணம் செலுத்தும் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த கட்டண முறையானது கையடக்க தொலைபேசிகள் மூலம் வங்கிகளுக்கிடையேயான மற்றும் தனிப்பட்ட வர்த்தக பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது.
UPI மூலம் QR குறியீட்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறையே இது.
NPCI International Payments Limited மற்றும் இலங்கையில் LankaPay Pvt Ltd நிறுவனங்கள் இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.
இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் 10,000 வணிக நிறுவனங்கள் தம்மை இந்த முறையில் பதிவு செய்துள்ளன.
மேலும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் தடையற்ற கொடுப்பனவு வசதிகளுக்காக 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கையை 65,000 வரை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.